நிதியியல் நிச்சயமின்மைக்கு மத்தியில் பிள்ளைகள் பெறுவதை ஒத்திவைத்துள்ள தம்பதியருக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். தகுதிபெறும் பெற்றோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அனுகூலங்களை வழங்கும் பேபி போனஸ் ரொக்க அன்பளிப்புக்கு மேலாக இந்த ஆதரவு ஒரே ஒரு முறை கொடுக்கப்படும்.
மக்கள் தொகை சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, இது குறித்து மேல் விவரங்களைப் பகிர்வார் எனத் தெரிவித்தார். கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு மத்தியில் வீடுகளுக்கு ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் உள்ள திரு ஹெங் கூறினார்.
நிதியாதரவுத் திட்டங்களின் மூலம் நிதியுதவி, அடுத்த சில மாதங்களுக்கு குடும்பங்களை வந்து சேரும் எனத் தெரிவித்தார். உதாரணத்திற்கு அக்டோபரில் மட்டும், தகுதிபெறும் வீடுகள் தங்களது பயனீட்டுக் கட்டணங்கள் தொடர்பிலான தள்ளுபடிகளைப் பெறுவர். மளிகைப்பொருட்களுக்கும் கட்டட பராமரிப்புக் கட்டணங்கள் தொடர்பிலான விலைக்கழிவுச் சீட்டின் முதல் பகுதி அவர்களைச் சேரும்.
தகுதிபெறும் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் ஊழியரணி சிறப்புத் தொகையின் அடுத்த பகுதியை அக்டோபர் மாதம் பெறுவர்கள். அந்த 3,000 வெள்ளி இரண்டு பகுதிகளாகக் கொடுக்கப்படும்.