சிங்கப்பூரில் சில்லறை விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து மேம்பட்டது. கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்து பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதை அடுத்து சில்லறை விற்பனை வீழ்ச்சியில் இருந்து மீளத் தொடங்கியது.
ஆண்டு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை விற்பனை 5.7 விழுக்காடு குறைந்தது. ஆண்டு அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் அது 8.5 விழுக்காடு சரிந்து இருந்தது. புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்ட தகவல் இதனைத் தெரிவித்தது.
மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து, சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8.4 விழுக்காடு குறைந்தது. ஆண்டு அடிப்படையில் பெரும்பாலான சில்லறை விற்பனைத் துறைகளில் விற்பனை குறைந்தது.
உணவு, மதுபான விற்பனை ஆக அதிகமாக 42.6 விழுக்காடு சரிந்தது. அதற்கு அடுத்த நிலையில், பகுதிவாரிக் கடைகளில் விற்பனை 35.3 விழுக்காடு குறைந்தது.
ஒப்பனைப் பொருட்கள், குளியலறைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை 29 விழுக்காடு குறைந்தது. காலணி, துணிமணிகளின் விற்பனை 28.6 விழுக்காடு குறைந்தது.ஆனால், பேரங்காடிகளில் விற்பனை 21.9 விழுக்காடு அதிகரித்தது. அறைகலன், வீட்டு உபயோகச் சாதனங்கள் விற்பனை 18.7 விழுக்காடு கூடியது. கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்கள் விற்பனை 16.4 விழுக்காடு அதிகரித்தது.
ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையால் வீட்டு உபயோகச் சாதனங்களுக்கான தேவை அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.
மோட்டார் வாகனங்கள் விற்பனை 12.1 விழுக்காடு கூடியது. புதிய, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு வலுவான தேவை ஏற்பட்டதாக புள்ளிவிவரத்துறை கூறியது.
உணவகங்களில் விற்பனை 32.2 விழுக்காடு சரிந்தது.
உணவுக் கடைகள், சிற்றுண்டிச் சாலைகளில் விற்பனை 17.6 விழுக்காடு குறைந்தது. விரைவு உணவகங்களில் விற்பனை 10.9 விழுக்காடு குறைந்தது.