சிங்கப்பூரில் ஒரு சில கடுமையான குற்றச்செயல்களைத் தடுப்பதில் மரண தண்டனை முக்கிய பங்காற்றுவதைக் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையைத் தவிர்க்க, போதைப்பொருட்களைக் கடத்துபவர்கள் குறைந்த அளவில் அவற்றை கடத்துவதாக உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டதை அவர் சுட்டினார். கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கொள்ளைச் சம்பவங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது, ஆட்கடத்தலில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்திருப்பதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் கேட்ட கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் திரு சண்முகம் இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை விதிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதில் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரது உரிமைகள் கருத்தில்கொள்ளப்படும் என்றார் அமைச்சர். பாதுகாப்பான சூழலில் வாழ விரும்பும் சிங்கப்பூரர்களின் உரிமைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.