2016ஆம் ஆண்டு ஈசூன் வட்டாரத்தில் ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்த ரயன் சேவியர் டே சீட் சூங் என்பவருக்கு நேற்று நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திரு ஷான் இக்னேஷஸ் ரோட்ரிகேஸ் எனும் 26 வயது இளையருக்கு வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததாக 24 வயது டே மீதான குற்றம் நிரூபணமானது. 2016ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, டேயால் தாக்கப்பட்டதை அடுத்து திரு ரோட்ரிகேஸ் உயிரிழந்தார்.
டே இந்தக் குற்றத்தைப் புரிய அவரது வளர்ப்புத் தந்தை 59 வயது லாரன்ஸ் லிம் பெக் பெங், டேவுக்கு உதவியதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அவர் மீதான குற்றம் நிரூபணமானது. லிம்முக்கு நேற்று எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டேவுக்கும் லிம்முக்கும் தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி டான் ஜென் சு, திரு ரோட்ரிகேஸ் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் கடுமையாக இருந்ததாகக் கூறினார்.
என்றாலும், குற்றவாளிகளான அவ்விருவருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் திரு ரோட்ரிகேஸ் தொல்லை கொடுத்து வந்ததை நீதிபதி டான் சுட்டினார்.
போலிசாரிடம் 50க்கும் அதிகமான முறை புகார் அளித்தபோதும் தேசிய சேவையாளரான திரு ரோட்ரிகேஸ் புளோக் 279 ஈசூன் ஸ்திரீட் 22ல் வசித்த டேயின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.