கடந்த ஆறு மாதங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரில் தகுதி உடைய பத்துப் பேரில் கிட்டத்தட்ட ஒன்பது பேருக்கு வழங்குதொகை கிடைத்ததாக மனிதவள அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட 84 விழுக்காட்டினருக்கு அவர்கள் வேலை செய்த ஒவ்வோர் ஆண்டிற்கும் குறைந்தது இரு வார ஊதியம் வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தமது அமைச்சுக்குக் கிடைக்கப் பெற்ற ஆட்குறைப்பு அறிவிப்புகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் பெறப்பட்டதாக திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
வேலை இழந்த ஊழியர்களில் கிட்டத்தட்ட மூவரில் இருவர் ஆட்குறைப்புப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர் என்றும் அவர் சொன்னார். ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஈராண்டு காலம் பணியாற்றியவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள்.
தகுதிபெறாத மற்ற ஊழியர்களிலும் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு ஆட்குறைப்பு வழங்குதொகை கிடைத்ததாக அமைச்சர் டியோ கூறினார்.
ஆட்குறைப்புச் சம்பவங்கள் தொடர்பான தமது அமைச்சின் விசாரணையின் அடிப்படையில் பார்க்கும்போது, பொதுவாகவே நிறுவனங்கள் தங்களது ஊழியர் அணியில் சிங்கப்பூரர்களைத் தக்க வைத்திருக்க தீவிர முயற்சிகள் எடுத்திருப்பது தெரியவந்ததாக அவர் சொன்னார்.
ஆட்குறைப்பு தவிர்க்கமுடியாத பட்சத்தில், சிங்கப்பூர் ஊழியரணிஅமைப்பும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் வேலை பெற உதவி வழங்குவதாக அமைச்சர் கூறினார்.
"சிங்கப்பூரர்கள் வேலையில் நீடித்திருக்க உதவ எடுக்கப்படும் முயற்சிகளுடன் அவர்களுக்குக் கல்வி, பயிற்சி, சுகாதாரப் பராமரிப்பு போன்ற வழிகளிலும் கூடுதல் உதவியும் ஆதரவும் வழங்கப்படுகின்றன. வேலைநலன், முதியோர் ஆதரவு போன்ற திட்டங்கள் குடிமக்கள் வேலை செய்யும்போதும் ஓய்வுக்காலத்தின்போதும் அவர்களின் வருமானத்தை உயர்த்த உதவுகின்றன," என்றார் அவர்.
அத்துடன், ஆட்குறைப்பு செய்ய நேர்ந்தாலும் சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்ட ஊழியரணியைக் கொண்டிருக்கும்படி நிறுவனங்களை முத்தரப்பு ஆலோசனைக் குழு வலியுறுத்தி வருவதாக திருவாட்டி டியோ கூறினார்.
இவ்வாண்டின் முற்பாதியில், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளைப் பொறுத்தமட்டில், ஆயிரம் ஊழியர்களுக்கு 4.9 பேர் என்ற விகிதத்தில் ஆட்குறைப்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். 60 மற்றும் அதற்கு மேல் வயதுடையோரிடத்தில் அவ்விகிதம் 1,000 பேருக்கு 5.2 பேர் என இருந்தது.
நிச்சயமில்லாப் பொருளியல் சூழலிலும், 60 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்த ஊழியரணியுடன் ஒப்பிடும் வகையில் இருப்பதாக அமைச்சர் டியோ சொன்னார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் 27.2 விழுக்காடாக இருந்த 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பு விகிதம், பத்தாண்டுகளில் 28.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதை திருவாட்டி டியோ சுட்டிக்காட்டினார்.
55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களின் ஊதியத்தை ஈடுகட்டுவதற்காகச் சிறப்பு வேலை நியமன உதவித்தொகை, கடந்த ஆண்டு அறிமுகமான பகுதி நேர மறுவேலை நியமனத்திற்கான மானியம் உட்பட முதியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை ஊக்குவிக்க கடந்த ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களையும் அமைச்சர் டியோ தமது உரையின்போது பட்டியலிட்டார்.

