இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் அதிகமானோர் மோசடிகளில் சிக்கி ஏமாந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் பதிவான 10,402 மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $157 மில்லியனை இழந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு ஆகும். கடந்த ஆண்டு 5,229 பேர் மோசடிச் சம்பவங்கள் மூலம் $92 மில்லியனை இழந்தனர்.
சிங்கப்பூரின் மோசடி நிலைமை குறித்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வீ நெங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
அதிகரித்து வரும் மோசடிகளை முறியடிப்பதற்காக வெளிநாட்டுச் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது, போலிஸ் படையில் மோசடிகளை முறியடிப்பதற்கான சிறப்புப் பிரிவுகளை அமைப்பது போன்ற முயற்சிகளை போலிஸ் முடுக்கிவிட்டுள்ளது என்று திரு டான் கூறினார்.
எடுத்துக்காட்டாக, மோசடி தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான முக்கிய மையமாக, போலிசின் மோசடி எதிர்ப்பு மையம் விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட அந்த மையம், முதல் ஆண்டில் 6,100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகவும் $21 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மீட்டுள்ளதாகவும் திரு டான் தெரிவித்தார்.
2018 நவம்பரில் அமைக்கப்பட்ட போலிஸ் படையின் இணைய வர்த்தக மோசடி அமலாக்க, ஒருங்கிணைப்புக் குழு இதுவரையில் 101 இணைய வர்த்தக மோசடிக்காரர்களைக் கைது செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்
இணைய வர்த்தக மோசடிகளே பொதுவாக அதிகமாக நடைபெறும் மோசடிக் குற்றங்களாகும். அதற்கு அடுத்து, சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளும் கடன் மோசடிகளும் உள்ளன என்று திரு டான் குறிப்பிட்டார்.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் பற்றிய விவரங்களை போலிசுக்கு அனுப்ப ஒரு வலைத்தளம் அமைக்குமாறு திரு ஆங் பரிந்துரைத்தார். அதற்குப் பதிலளித்த திரு டான், scamalert.sg தளம் சிங்கப்பூரர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது என்றார்.

