நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும் ஆலோசனைக் குறிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்.
பெயர் குறிப்பிடாமல் வெளிப்புற ஆலோசனைச் சேவைகள் பெறும் வசதி, மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை முன்னதாகவே அடையாளம் காண மேற்பார்வையாளர்களுக்குப் பயிற்சி போன்ற நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் அந்த ஆலோசனைக் குறிப்பில் இடம்பெற்றிருக்கும்.
மனநலம் தொடர்பான முத்தரப்பு ஆலோசனைக் குழு இப்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இதன் தொடர்பில், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மனநல வல்லுநர்கள், குடிமைச் சமூகக் குழுக்கள் ஆகியோருடன் மனிதவள அமைச்சு இணைந்து பணியாற்றி வருகிறது.
கொவிட்-19 வேலை ஏற்பாடுகளின்கீழ் உள்ள ஊழியர்களின் மனநலத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட அனைத்து அமைப்பு ஆலோசனைக் குறிப்பு, ஒரு பயனுள்ள குறிப்பாகத் திகழ முடியும் என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
மனநல ஆதரவு அளிக்கும் வெளிப்புற வளங்களின் பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது. தங்களின் ஊழியர்களுக்கு மனநல ஆதரவு வழங்க அவற்றை ஈடுபடுத்திக்கொள்வது குறித்துந் நிறுவனங்கள் பரிசீலிக்கலாம்.
“நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளைத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, ஊழியர்களுடன் மேற்பார்வையாளர்கள் அடிக்கடி பேசுவதன் மூலம் அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளனரா என்பதை அறிந்து, தேவைப்பட்டால் வெளிப்புற உதவிக்குப் பரிந்துரைக்கலாம்,” என்றார் திரு ஸாக்கி.
வீட்டிலிருந்து வேலை செய்யும் இப்போதைய ஏற்பாடுகள், வேலை நேரத்திற்கும் தனிப்பட்ட நேரத்திற்கும் இடையே தெளிவின்மையை ஏற்படுத்தி இருப்பதாக ஒத்துக்கொண்ட அவர், வேலை - வாழ்க்கைச் சமநிலையைச் சிறப்பாகப் பேணுவது எப்படி என்பதை அரசாங்கம் ஆராய வேண்டியது முக்கியம் என்றும் சொன்னார்.
ஆயினும், வேலை நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் வேலை சார்ந்த பணிகளை மேற்கொள்ளாதிருக்க வகைசெய்யும் ‘விலகியிருக்கும் உரிமை’ சட்டம் இவ்வுலகிற்குப் புதியது என்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் அதன் விளைவுகளைக் கவனித்து வருகின்றன என்றும் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
வேலை செய்யும் திறனுடன் நேரடித் தொடர்பு இல்லாதபட்சத்தில், ஊழியர் ஒருவரின் மனநலம் குறித்த தகவல்களை நிறுவனங்கள் கேட்கக்கூடாது என்ற ஆலோசனை, புதிய ஆலோசனைக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படுமா என்று நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு ஸாக்கி, “முத்தரப்பு ஆலோசனைக் குறிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் அதுகுறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், நிச்சயமாக அது குறித்து ஆராய்வோம்,” என்றார்.
அதே நேரத்தில், வேலைக்குத் தேவைப்படாத பட்சத்தில், வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அத்தகைய தகவல்களைக் கேட்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுவது இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.