பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை நேரத்தை அனுமதிக்கும்படி முதலாளிகளைப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் கேட்டுக்கொண்டுள்ளார். வேலையிடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் காலை உச்சநேரத்துக்குப் பிறகு அலுவலகங்களுக்குப் புறப்பட முதலாளிகள் ஏற்பாடு செய்யலாம் என்றார் அமைச்சர் ஓங்.
அவ்வாறு செய்வதன் மூலம் ஊழியர்கள் காலை 10 மணி அல்லது அதற்குப் பிறகு அலுவலகத்தை அடைவர் என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் கிருமிப் பரவல் முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ஓங் பதிவிட்டார்.
“கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு பொதுப் போக்கு வரத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கையில் 50 அல்லது 60 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். இது உச்சநேரம் மற்றும் உச்சநேரமற்ற வேளைகளுக்கும் பொருந்தும்,” என்று திரு ஓங் கூறினார்.
ஆனால் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.
“முன்பைவிட ரயில்களில் தற்போது அவ்வளவாகக் கூட்டம் இருப்பதில்லை. மேலும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசத்தை அணிந்துகொண்டு பிறரிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் திரு ஓங்.
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியிலிருந்து அலுவலகங்களுக்குத் திரும்ப கூடுதல் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது.
கூட்டங்கள், பயிற்சிகள், வர்த்தக மாநாடுகள் போன்ற வேலை தொடர்பான நிகழ்வுகளை நடத்தலாம்.
இருப்பினும், ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அலுவலகத்திலும் அதற்கு வெளியிலும் சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை.
வேலை, பயணம் தொடர்பான பழக்கவழக்கங்களை மாற்ற அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அதை வீணடிக்க வேண்டாம் என்றும் முதலாளிகளை திரு ஓங் கேட்டுக்கொண்டார்.
“வேலையிடம், வேலை நேரம் ஆகியவற்றில் நீக்குப்போக்குடன் இருக்க வேண்டும். பிறரைச் சந்திப்பதற்கும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கும் குறிப்பிட்ட சில சாதனங்களைப் பயன்படுத்து வதற்கும் அலுவலகங்களுக்கு ஊழியர்கள் செல்கின்றனர்.
“உச்சநேரமற்ற வேளைகளில் கூட்டமில்லாத பொதுப் போக்குவரத்தில் மேலும் பலர் பயணம் செய்யலாம்,” என்றார் திரு ஓங்.