வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுச் சன்னல்கள் அருகில் அல்லது மேல் மாடத்தில் புகை
பிடிப்பதைத் தடை செய்ய அரசாங்க நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்துள்ளது. சிகரெட் புகையால் அண்டைவீட்டார் பாதிப்படைவதை இது குறைக்கும் என்று அது தெரிவித்தது.
பிறர் புகைபிடித்து அதனால் ஏற்படும் புகையால் பாதிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 383 பேர் மாண்டதை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கும் திரு லுயில் இங் சுட்டினார்.
“இது அன்றாடம் ஒருவர் இறப்பதற்குச் சமம். இதுகுறித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று திரு இங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வோர் தம்மிடம் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதாக திரு இங் கூறினார். இது பல ஆண்டுகளாக நீடிப்பதாகவும் தற்போது மோசமடைந்திருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் புகைபிடிப்பது தொடர்பாக தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் 11,400 புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு அதிகம்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக முன்பைவிட மேலும் அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்து வரும் நிலையில், சமூக சமரச மையம் வரை சென்றிருக்கும் புகைபிடித்தல் தொடர்பான சர்ச்சைகள் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக திரு இங் தெரிவித்தார்.
பலர் உதவி கேட்டு அதிகாரிகளை நாடியதாகவும் ஆனால் அது கைகொடுக்கவில்லை என்றும் திரு இங் தெரிவித்தார்.
“இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி செய்ய விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தகுந்த சட்டம் ஏதும் இல்லாததே இதற்குக் காரணம்,” என்றார் திரு இங்.
இந்நிலையில், திரு இங் முன்வைத்த பரிந்துரைகளுக்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் பதிலளித்தார்.
பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை ஒருவரின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடுவதாகிவிடும் என்று தெரிவித்தார். இத்தகைய விதிமுறைகளை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்றார் அவர். குடியிருப்பாளர்களின் உரிமைகள் குறித்து ஏற்கெனவே நிலவும் அக்கறைகளை இது மேலும் மோசமாக்கும் என்று டாக்டர் கோர் கூறினார். மாறாக, மூன்று வெவ்வேறு அணுகுமுறைகளை அமைச்சு கையாளும் என்று அவர் தெரிவித்தார்.
முதலில் புதிய சமூக வழக்கத்தையும் கூடுதல் சமூகப் பொறுப்பையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டாக்டர் கோர்.
இரண்டாவதாக, அண்டைவீட்டுக்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்படும்போது அவர்களுக்குள் பேசித் தீர்க்க கூடுதல் வழிகளை ஆராய வேண்டும் என்றார் அவர்.
மூன்றாவதாக அண்டைவீட்டுக்காரர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படும்போது அவற்றை பல அமைப்புகளைக் கொண்டு சமூகப் பிரச்சினை நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு கையாளலாம் என்பது குறித்தும் சமூக சமரச செயல்முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று டாக்டர் கோர் தெரிவித்தார்.