உலகம் சில வழிகளில் பிளவுபட்ட ஒன்றாக மாறிவர, இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சவால்களை எதிர்நோக்கும் நாடுகளுக்கு விதிமுறைகள்-அடிப்படையிலான பலதரப்பு அமைப்புக்குள் அனைத்துலக ஒத்துழைப்பு கிடைப்பது மேலும் இன்றியமையாததாகியுள்ளது என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்.
தற்போதுள்ள பலதரப்பு வர்த்தக அமைப்புமுறைக்கான பொது விதிகளை அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன.
அத்துடன் ஒருங்கிணைந்த விருப்பங்களைக் கொண்ட பங்காளிகளுக்கிடையேயும் கூடுதல் ஒத்துழைப்புக்கு இடமளிக்கப்படுகிறது. இந்த அமைப்புமுறைக்கு ஒத்ததாக தமது அனைத்துலக இணையச் சூழலுக்கான தொலைநோக்குப் பார்வை இருப்பதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
“இணையப் பாதுகாப்பை எடுத்துக்கொண்டால், எடுத்துக்காட்டாக ஐக்கிய நாடுகள் ஆற்றியுள்ள பணி அந்த பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குவதில் மிக முக்கியமானதாக உள்ளது,” என்றார் அவர்.
பெரும்பாலும் மெய்நிகராக நடைபெறும் இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் தொடக்க நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு பேசியிருந்தார்.
“வட்டார பங்காளித்துவமும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரே சிந்தனையுடைய நாடுகள் இணைந்து செயல்பட முடியும். அத்துடன் பலதரப்பு தளத்தின் மூலம் சாதிப்பதைக் காட்டிலும் மேலும் வேகமாகவும் புத்தாக்கத்துடனும் இயங்கி அதிகமாகச் சாதிக்கலாம்,” என்றார் திரு ஈஸ்வரன்.
பல பங்குதாரர்கள் தொடர்பான ஒரு கலந்துரையாடலில் பலதரப்புத்தன்மையையும் கருத்து வேறுபாடு இன்மையையும் ஒரு சேரக் கொண்டுவரக்கூடாது என்றும் அவர் கூறினார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் பலன்களை முழுமையாக அனுபவிக்க அரசாங்கங்களுக்கும் தனியார் துறைக்கும் மேலும் வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார் அமைச்சர்.
“தனியார் துறையிடம் உள்ள புத்தாக்கமும் உத்வேகமும் உங்களுக்குத் தேவை.
சமூகத்திலும் பொருளியலிலும் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன என்பதை மதிப்பிட்டு அனைவரையும் திட்டத்தில் இணைப்பது குறித்து அரசாங்கத்தின் செல்வாக்கும் அவசியம்,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரம் வெள்ளிக்கிழமை முடிவுறும்.