சிங்கப்பூர் நிறுவனங்களுக்குத் தற்போது நேர்ந்துள்ள பணப்புழக்க நெருக்கடியால் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேரத்துடன் கட்டணம் செலுத்துவதைப் பாதித்துள்ளது. அதிலும் காலாண்டு அடிப்படையில் கட்டுமானத் துறையிலேயே ஆக அதிகமான கட்டணத் தாமதம் பதிவாகியது.
மூன்றாம் காலாண்டின் மொத்த பரிவர்த்தனைகளில், நேரத்துடன் செலுத்தப்பட்ட கட்டணங்கள் 38.39%. முந்தைய காலாண்டில் இது 40.09 விழுக்காடாக இருந்தது. 2012ன் இரண்டாம் காலாண்டில் பதிவான 37.3 விழுக்காட்டுக்கு அடுத்து இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவானதே ஆகக் குறைவு. சிங்கப்பூர் வர்த்தக கடன் இலாகா நேற்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் ஒப்பிடுகையில் நேரத்துடன் கட்டணம் செலுத்தும் விகிதத்தில் மேலும் பெரிய சரிவு காணப்பட்டது. 2019ன் மூன்றாம் காலாண்டில் 48.81% என பதிவாகியிருந்தது. இவ்வாண்டுடன் ஒப்பிட்டால் இது 10.42% சரிவு. கடன் இலாகா மூலம் இயங்கி வரும் நிறுவனங்களின் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளிலிருந்து 'டி அண்ட் பி சிங்கப்பூர்' தரவு திரட்டியிருந்தது.
கட்டணங்களைத் தாமதமாகச் செலுத்தியதன் விகிதம், சென்ற காலாண்டுடன் ஒப்பிடுகையில் 45.78 விழுக்காட்டிலிருந்து 44.16 விழுக்காட்டுக்கும் சிறிதளவு சரிந்தது. இருப்பினும் ஆண்டு அடிப்படையில் 2019ன் மூன்றாம் காலாண்டில் 37.29 விழுக்காடாக இருந்தது இந்த காலாண்டில் 6.87% என அதிகரித்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் ஒரு நிறுவனம் அதன் 90% அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணங்களைச் செலுத்தி இருந்தால் நேரத்துடன் கட்டணம் செலுத்துவதாக அது குறிக்கும். 50% மட்டுமே நேரத்துடன் செலுத்தப்பட்டிருந்தால் அது தாமதமான கட்டணமாகும்.
இதற்கிடையே பகுதிவாரியான கட்டணங்கள் அதாவது 50% முதல் 70% கட்டணங்கள் நேரத்துடன் செலுத்தப்பட்டது மூன்றாம் காலாண்டில் 17.45% அதிகரித்திருந்தது. முந்தைய காலாண்டில் இது 14.13 விழுக்காடாக இருந்தது.
இந்நிலையில் வர்த்தகங்களின் பகுதிவாரியான கட்டணங்கள் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட 'டி அண்ட் பி சிங்கப்பூர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி ஆட்ரி சியா, அடுத்த சில மாதங்களிலும் படிப்படியாக கட்டணம் செலுத்தும் இந்தப் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

