பூன் லே கடைத்தொகுதியிலுள்ள பேரங்காடி ஒன்றில் புதன்கிழமையன்று (அக்டோபர் 7ஆம் தேதி) பிற்பகல் அளவில் 23 வயது ஆடவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் தரையிலும் அலமாரிகளிலும் ரத்தக் கறைகள் படிந்திருந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
குறைந்தது இரண்டு ஆடவர்கள் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக இணையத்தில் எழுதப்பட்டிருந்தது.
அக்டோபர் 7ஆம் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு 221 பூன் லே பிளேயில் பிறருக்கு கடுமையான காயத்தை வேண்டுமென்றே விளைவிக்கப்பட்ட சம்பவம் பற்றித் தெரிய வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
“23 வயது ஆடவர் ஒருவரை மற்றோர் ஆடவர் தாக்கினர். முகத்திலும் தலையிலும் காயமடைந்த அந்த 23 வயது ஆடவர் சுயநினைவுடன் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விசாரணை தொடர்கிறது” என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.