வேலை தேடுவோருக்கும் காலியாக உள்ள வேலைகளுக்கும் இடையிலான பொருத்தத்தை ஏற்படுத்துவது சிக்கலான பணி என்றும் அதற்கான நடைமுறைகளை மேம்படுத்த மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்துள்ளார். கிராஞ்சியில் கட்டுமான நிறுவனமான சேம்வோ கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்திற்கு நேற்று சென்றிருந்த அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். ஆக அண்மைய வேலை நிலவர அறிக்கையை மனிதவள அமைச்சு வெளியிட்ட பின்னர் அது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
தேசிய வேலை மன்றம் இதுவரை 117,500 வேலை, பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது 100,000 வேலை, பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற இலக்கையும் மிஞ்சிவிட்டது. ஆயினும், இதற்குரிய இடங்களில் 33,100 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சிய இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.
அது குறித்து விளக்கிய துணைப் பிரதமர், “வேலைவாய்ப்பு என்னும் அம்சத்தில் நாம் முன்னோக்கி நடைபோடுவதால் காலியாக உள்ள வேலைகளுக்கும் வேலை தேடுவோருக்கும் இடையில் பொருத்தத்தை இன்னும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எஸ்ஜி யுனைடெட் வேலை, திறன் மையங்களும் இன்னும் சில அமைப்புகளும் இதற்கான மறுஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளன,” என்றார் நிதி அமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.
“வேலை தேடுவோரின் விருப்பத்திற்கு ஏற்ற வேலையை வழங்கும் நோக்கில் தற்போது நடப்பில் உள்ள தரவுதள முறைகளை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அம்சத்தையும் மறுஆய்வு உட்படுத்தும்.
“வேலைகளை இழந்தோர் அதேபோன்ற வேலையைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் விடாமுயற்சியுடன் ஈடுபடக்கூடிய மீள்திறன் உணர்வு நம்மிடையே மிகுந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். பொருத்தமான வேலையை தேடும் நடைமுறை சிக்கலானது என்பதால் விடாமுயற்சியோடு தேடுதலில் ஈடுபட்டால் உரிய வேலையை எப்படியாவது அவர்கள் பெறக்கூடிய சாத்தியம் உள்ளது.
“வேலை தேடும் அதேநேரம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஏராளமான திட்டங்கள் உள்ளன. புதிய திறன்களையும் அவற்றின் மூலம் பெறலாம் என்பதால் ஊழியர்கள் இதற்கான திட்டங்களை போதுமான அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று திரு ஹெங் ஊக்கமளித்தார்.
கொவிட்-19 கொள்ளைநோய் உலகளவிலான பொருளியலையும் வேலைச் சந்தைகளையும் மாற்றி அமைத்து வரும் வேளையில் சிங்கப்பூர் வளர்ச்சி கண்டு வரும் துறைகள் இருப்பதால் வேலை தேடுவோர் நம்பிக்கையுடன் முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வேலை தேடுவோர் புதிய பொறுப்புகளை ஏற்கவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கும் அதேவேளை, அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முதலாளிகள் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்றார் அவர்.