கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடி தொடங்கியது முதல் பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் மூலம் 33,100 பேருக்கு வேலைகளும் வேலைப்பயிற்சி இடங்களும் கிடைத்துள்ளதாக மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
'எஸ்ஜியுனைடெட் வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின்' கீழ் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உருவாக்கப்பட்ட 117,500 புதிய வேலைகள், வேலைப்பயிற்சி வாய்ப்புகளில் 33,100 பேர் பலன் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரின் வேலை நிலவரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வரும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, நேற்று இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு மே மாதத்தில் $2 பில்லியன் மதிப்பிலான 'எஸ்ஜியுனைடெட் வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டம்' அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்றைய அறிக்கையில் அமைச்சர் டியோ தற்போதைய நிலவரத்தைத் தெரிவித்தார்.
ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை 25,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது. 17,000 வேலைகளும் நிறுவனங்களின் 7,900 வாய்ப்புகள், வேலைப்பயிற்சி இடங்களும் இதில் அடங்கும்.
அரசாங்க நிதி ஆதரவு பெற்ற வாய்ப்புகளும் பொதுத்துறை வேலைகளும் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதாக அறிக்கை தெரிவித்தது. நீண்டகாலத்திற்கு நீடிக்கும் சுமார் 60,000 வேலைகளில், 37,290 வேலைகள் தனியார் துறை உருவாக்கியவை.
"இது நல்ல முன்னேற்றம். வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதில் மட்டும் முன்னேற்றம் அல்ல, ஆட்களை வேலையில் அமர்த்துவதிலும் நல்ல முன்னேற்றம்," என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் திருவாட்டி டியோ. ஜூலை மாத இறுதியில் 24,000 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர். பின் இந்த எண்ணிக்கை 9,100 ஆக அதிகரித்து ஆகஸ்ட் இறுதியில் 33,100 ஆனது.
வேலை தேடுவோருக்குத் தகுந்த வாய்ப்பை அமைக்கும் போக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
வேலையில் அமர்த்தப்படுவது 5,580 ஆக அதிகரித்து தற்போது மொத்தம் 29,580 ஆகியுள்ளது. 12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு நீடிக்கும் வேலையில் அமர்த்தப்பட்டோரின் விகிதம் 55%. இது ஜூலை இறுதியில் பதிவான 58 விழுக்காட்டைக் காட்டிலும் சரிவு.
அரசாங்கம் முன்னதாக குறுகிய கால பொதுத் துறை வேலைகளில் வேலை தேடுவோரையும் பாதிக்கப்பட்ட ஊழியர்களையும் அமர்த்துவதில் குறியாக இருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.
நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வேலைகளில் அமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 45 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. இது ஜூலை இறுதியில் 42 விழுக்காடாக இருந்தது.
பொருத்தமான வேலையில் அமர்த்துவதில் கூடுதல் நேரம் செலவிடப்படுவதாக அறிக்கை கூறியது.

