பொய்ச் செய்திகள் இன்னும் வேகமாகப் பரவும் தன்மையுடையவை என்று வலைப்பதிவாளருக்கு எதிராகப் பிரதமர் லீ தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்தார் டாக்டர் பான் துவான் குவாங். இருப்பினும், சாட்சியின் சார்பற்ற நிலை மற்றும் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லிம் தியென்.
வலைப்பதிவாளர் திரு லியோங் ஸி ஹியனுக்கு எதிராக பிரதமர் லீ சியன் லூங் தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணை நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. திரு லியோங்கின் வழக்கறிஞராக எதிர்க்கட்சி அரசியல்வாதி திரு லிம் தியென் வாதாடுகிறார்.
நீதிமன்றத்திற்கு நேற்று நிபுணத்துவச் சாட்சியாக வந்த டாக்டர் பான், ஹாங்காங் பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியின் புத்தாக்கம் மற்றும் தகவல் நிர்வாகத் துறை துணைப் பேராசிரியர் ஆவார்.
சமூக ஊடகம் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் பான், அதன் தொடர்பில் ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் லீ தொடர்பான 'அதிர்ச்சி'க்குரிய குற்றச்சாட்டுகள் கொண்ட செய்தியைத் தாங்கிய ஃபேஸ்புக் பதிவு, பொய்ச் செய்திகளைத் திருத்துவது தொடர்பான செய்திகளைக் காட்டிலும் மேலும் வேகமாகப் பரவும் என்று டாக்டர் பான் கூறினார்.
திரு லியோங்கின் பதிவு 11,749 பேரின் ஃபேஸ்புக் பக்கங்களில் தோன்றியிருக்கும் என்று தாம் மதிப்பிடுவதாக நீதிமன்றத்திடம் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் டாக்டர் பான் குறிப்பிட்டிருந்தார்.
சாட்சியின் அறிக்கை 'ஊகமே'
இருப்பினும், அறிக்கை வெறும் 'ஊகமே' என்று திரு லிம் கூறினார். ஃபேஸ்புக் பதிவு தொடர்பான உண்மை தரவுகள் திரு பாங்கிடம் இல்லை என்று வழக்கறிஞர் லிம் சுட்டினார்.
'1எம்டிபி' தொடர்பான மோசடியில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதில் சிங்கப்பூர் வங்கிகள் உதவும் என்று பிரதமர் லீயும் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாக 'தி கவரேஜ்' மலேசிய செய்தித் தளத்தில் கூறப்பட்டது. இதற்கான இணைப்பு திரு லியோங் பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவில் இருந்தது.
எளிதில் மக்கள் கவனத்தை இதுபோன்ற செய்திகள் ஈர்க்கும் என்றும் உடனடியாக அதைப் பகிர்ந்திடச் செய்யும் என்றும் டாக்டர் பான் கூறினார். இந்தப் பதிவு நேற்று வழக்கு விசாரணையின்போது அலசி ஆராயப்பட்டது. நூற்றுக்கணக்கான சிங்கப்பூரர்கள் பதிவைப் பார்த்திருப்பார்கள் என்று பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் கூற, அவ்வாறு நடந்திருக்காது என்று மறுத்தார் திரு லிம்.
குறைந்தபட்சம் சுமார் 200 முதல் 400 சிங்கப்பூரர்கள் திரு லியோங்கின் பகிர்வில் இருந்த இணைப்பை 'கிளிக்' செய்திருப்பார்கள் என்று டாக்டர் பான் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் திரு லிம் இந்தக் கணிப்புகள் கேள்விக்குரியது என்று சுட்டினார்.
டாக்டர் பான் 'எந்த ஒரு தரவும் இன்றி, அல்லது ஆதாரமுமின்றி, கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட முழு அறிக்கை' ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக திரு லிம் கூறினார்.
டாக்டர் பான் அளித்தது உண்மையில் யூகம் என்றும் அது நிபுணத்துவச் சாட்சியம் கிடையாது என்றும் திரு லிம் விவரித்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த டாக்டர் பான், தாம் ஃபேஸ்புக் தளத்தின் தரவு அறிவியல் குழுக்களுடன் மிக விரிவாகப் பணியாற்றியுள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் நான்கு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
'சார்பற்ற நிலை' அல்ல
இதற்கிடையே டாக்டர் பான் எந்தத் தரப்பையும் சாராதவர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார் திரு லிம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த டாக்டர் பான், சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புகளிடமிருந்து ஆய்வு மானியங்கள் பெற்றுள்ளதாக திரு லிம் குறிப்பிட்டார். டாக்டர் பானுக்கும் திரு லீ தலைமையில் இயங்கிய சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையே ஓர் உறவு இருந்ததைச் சுட்டினார் திரு லிம்.
'திரு லியோங் சாட்சிக்கூண்டில் ஏறப் போவதில்லை'
வழக்கு விசாரணையின் இரண்டாம் பாதி தொடங்கியதும் குறுக்கு விசாரணை செய்யப்படுவதற்காக திரு லியோங் சாட்சிக் கூண்டில் ஏறப் போவதில்லை என்று திரு லிம் நீதிபதியிடம் தெரிவித்தார்.
வழக்கை 'அற்பமானது மற்றும் எரிச்சல் ஊட்டக்கூடியது' என்றும் அது 'நீதிமன்றத்திலிருந்து வெளியில் தூக்கியெறிப்பட்டு சிரிக்கப்பட வேண்டிய ஒன்று' என்றும் கூறினார் திரு லிம். மேலும் பிரதமர் லீயை நேற்று முன்தினம் குறுக்கு விசாரணை செய்ததே தமக்குப் போதுமானது என்று குறிப்பிட்டார் அவர்.
இருப்பினும், வழக்கு விசாரணை தொடங்கியபோது திரு லியோங் குறுக்கு விசாரணைக்கு முன்னிலையாவார் என்று திரு லிம் குறிப்பிட்டிருந்ததாக பிரதமர் லீயின் வழக்கறிஞர் திரு தவீந்தர் சிங் சுட்டினார்.
பிரதமர் லீக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுவது தமக்கு மட்டுமல்ல, தமது ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து சிங்கப்பூரர்களுக்காகவும் தான் என திரு லியோங் தமது ஃபேஸ்புக் பதிவுகளிலும் பேட்டிகளிலும் கூறியிருந்ததையும் திரு சிங் குறிப்பிட்டார்.
"திரு லீ நீதிமன்றத்திற்கு வந்து சாட்சிக் கூண்டில் நின்றுவிட்டார். எந்தக் கேள்விக்கும் அஞ்சாமல் தம் நிலையைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
"ஆனால் நீதிமன்றச் செயல்முறையை அவர் அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர், பின்வாங்கிவிட்டார். இது பெரும் வருத்தத்திற்குரியது. ஆனால் எதிர்பார்த்ததுதான்," என்றார் திரு சிங்.
வழக்கு விசாரணை நவம்பர் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

