கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த சமயத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காக அக்லிமா அப்துல் அஸ்மி, 19, மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், நேற்று முன்தினம் காலை அக்லிமாவின் பெயரை நீதிமன்ற அதிகாரி அழைத்தபோது அவர் முன்னிலையாகாத நிலையில் அக்லிமா மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் பகல் வேளையில் அக்லிமா நீதிமன்றத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அக்லிமாவைக் கண்டித்த நீதிபதி, அவருக்கு $3,000 அபராதம் விதித்தார்.
அபராதத் தொகையை அக்லிமா கட்டாததால் 12 நாட்கள் சிறைத் தண்டனையைத் தற்போது நிறைவேற்றுவதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததை ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொண்டார் அக்லிமா. ஜூன் 27ஆம் தேதியன்று பியோ கிரெசண்ட் புளோக் 42 அருகே உள்ள உடற்பயிற்சிப் பகுதியில் 13 பேர் கொண்ட கும்பல் கூடியது. அதில் அக்லிமாவும் ஒருவர்.
இரவு 9 மணிக்கு அங்கு கூடிய கும்பல், போலிசாருக்குக் குடியிருப்பாளர் ஒருவர் தகவல் அளித்ததை அடுத்து பின்னிரவு 1 மணி அளவில் கலைந்து சென்றது. இருப்பினும் 13 பேரும் பிடிபட்டனர். இவர்களில் மூவர் மீதான வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன.