ஆண்டிறுதித் தேர்வுகளுக்குப் பின் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் அதிக இணைப்பாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அதிக அபாயமுள்ள நடவடிக்கைகள் தவிர்த்து மற்ற இணைப்பாட நடவடிக்கைகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இப்போது 20 பேர் வரை மட்டுமே அந்நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும்.
கற்றல் பயணங்கள், கல்வி அமைச்சின் வெளிப்புற சாகச கற்றல் நிலையங்களில் இடம்பெறும் தங்கியிருக்கத் தேவையில்லாத நடவடிக்கைகள் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் இம்மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் தொடங்கும்.
உள்ளூர் ‘ஒலிம்பியாட்’ போட்டிகள், பேச்சு, நாடக நிகழ்ச்சிகள் போன்ற பள்ளிகளுக்கு இடையிலான பல நடவடிக்கைகளும் இம்மாத நடுப்பகுதியில் இருந்து தொடங்க அனுமதிக்கப்படும்.
தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளும் சிங்கப்பூர் இளையர் விழாவும் 2021ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் தொடங்கும்.
அதேபோல, மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து சிங்கப்பூர் வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டும். விளையாடும்போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க மாட்டார்கள் என்பதால் அப்போது அவர்களுக்கு இடையே குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
ஒரு மீட்டர் இடைவெளி விதியைக் கடைப்பிடிக்க முடியாத நடவடிக்கைகளில், ‘ஐவர் குழு’ விதி பின்பற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு நடவடிக்கையின் முடிவிலும், குழுக்கள் மாற வேண்டும்; அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளும் பொதுவான வசதிகளும் துடைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் சமூக, உணர்வுசார் நல்வாழ்விற்கும் முழுமையான வளர்ச்சிக்கும் இணைப்பாட நடவடிக்கை அனுபவங்களும் பள்ளி நடவடிக்கைகளும் முக்கியமான காரணிகளாகத் திகழ்கின்றன என்று அமைச்சு கூறியுள்ளது.
“அதிக நாட்டமுள்ள நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தோழமை உணர்வை, நற்பண்புகளை, மீள்திறனை வளர்க்கவும் மனநலத்தை வலுப்படுத்தவும் இணைப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு வாய்ப்புகளையும் தளங்களையும் ஏற்படுத்தித் தருகின்றன,” என்று அமைச்சு தெரிவித்தது.