சிங்கப்பூரில் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் புதிதாக மூவர் இணைந்துள்ளனர். செல்வத்தின் மொத்த மதிப்பாக குறைந்தது $1 பில்லியன் வைத்திருப்போர் பெரும் செல்வந்தர்களாக அழைக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் மொத்தம் 25 பெரும் செல்வந்தர்கள் உள்ளனர். இங்குள்ள பெரும் செல்வந்தர்களின் மொத்த மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 11 விழுக்காடு கூடி 79.1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியிருந்தது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவர்களது செல்வத்தின் மொத்த மதிப்பு மேலும் 30 விழுக்காடு கூடி 102.6 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
அதே காலகட்டத்தில் பங்குச்சந்தைகள் எழுச்சி பெற்றதே பெரும் பணக்காரர்களின் செல்வத்தின் மதிப்பு கிடுகிடுவென அதிகரிக்கக் காரணம்.
இந்நிலையில், உலகிலேயே ஆசியாவில்தான் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஆக அதிகம் என்று ‘யுபிஎஸ்’, ‘பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ்’ நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஆசிய பசிபிக் பகுதியில் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக 831ஐ எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கையில் இது 38 விழுக்காடு ஆகும்.
அவர்களின் ஒட்டுமொத்த செல்வத்தின் மதிப்பு 3.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$4.49 டிரில்லியன்) ஆகும். ஒவ்வொருவரிடமும் இருக்கும் செல்வத்தின் மதிப்பு சராசரியாக 4 பில்லியன் டாலர்.
உலகம் முழுவதும் 43 சந்தைகளில் 2,000க்கும் அதிகமான பெரும் செல்வந்தர்களின் விவரங்கள் ஆராயப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியா முழுவதும் சுகாதாரப் பராமரிப்பு, தொழில்நுட்பத் துறைகளில் மட்டும் 181 பெரும் செல்வந்தர்கள் உள்ளனர்.
இந்தத் துறைகளில்தான் ஆக அதிக எண்ணிக்கையிலான பெரும் செல்வந்தர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள பெரும் செல்வந்தர்களில் 81 விழுக்காட்டினர் தங்களது வாழ்நாளில் சுயமாக செல்வத்தைச் சேர்த்தவர்கள். ஆசியாவில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிடும்படியாக, ஆசியாவில் பெண் செல்வந்தர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 68ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2013ஆம் ஆண்டு அது 26ஆக இருந்தது.