சிங்கப்பூரில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது உள்ளூர் ஊடக இணையத்தளங்கள் போன்ற மின்னிலக்க தளங்களின் முக்கியத்துவம் கூடியது. கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஓர் ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி போன்ற வழிவழியான ஊடகத்தை நாடிய வாக்காளர்களின் விகிதாச்சாரம் 2015 தேர்தலுடன் ஒப்பிடும் போது குறைந்து இருப்பதாக அந்த ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் கேரல் சூன் தெரிவித்தார்.
இவர் இணையம் மற்றும் ஊடக பயனீடு என்ற இணையக் கருத்தரங்கில் நேற்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.
ஆய்வில் உள்ளடக்கப்பட்ட 2,018 வாக்காளர்களைப் பார்க்கையில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூகக் கட்டமைப்புத் தளங்களும் வாட்ஸ்அப் போன்றவையும் மிகவும் பிரபலமாக இருந்த இரண்டு தளங்கள் என்பது தெரியவந்துள்ளது.
பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் மின்னிலக்கத்தைப் பொறுத்தவரை நிறைய இடைவெளி இருக்கிறது என்று கூறப்படும் கருத்தை நிராகரிக்கும் வகையில் 56 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்கள் இன்ஸ்டகிராமை பயன்படுத்தி அரசியல் கட்சிகளைப் பற்றியும் வேட்பாளர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார்கள்.
மக்கள் செயல் கட்சிக்கு வாக்களித்தோரைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே அதே கட்சிக்குத்தான் வாக்களிப்பேன். அந்தக் கட்சி பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது என்பதுதான் முக்கியமானதாக இருந்தது.
எதிர்த்தரப்புக்கு வாக்களித்தவர்கள் நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரலைக் கேட்க விரும்பியதும் ஒரே கட்சியை விரும்பாததும் முக்கிய காரணமாக இருந்தது.
இதனிடையே, சமூக ஊடக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்த 4 எச்சரிக்கை அறிகுறிகளில் அரசியல் கட்சிகள் அதிக கவனத்தைச் செலுத்தி இருந்தால் தேர்தல் முடிவுகள் வியப்பளிக்கும் ஒன்றாக இருந்திருக்காது என்று ‘அனலிட்டிக்ஸ் லாப்ஸ்’ என்ற நிறுவனத்தின் கணினித் தகவல் பகுப்பாய்வுத் துறைத் தலைவர் சுவா சின் ஹோன் கூறுகிறார்.