பூன் லே கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் கடையில் கத்தியைக் கொண்டு ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட பதின்ம வயது இளைஞர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமேன்றே கடுமையான காயம் விளைவித்ததாக அந்த 18 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்படும்.
அந்தப் பேரங்காடியில் கடந்த புதன்கிழமை பிற்பகல் சுமார் 12.40 மணிக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் 23 வயது ஆடவர் முகத்திலும் தலையிலும் காயமடைந்தார்.
பிரத்யேகப் படச்சாதனங்களின் உதவியோடும் பலரிடம் விசாரணை நடத்தியும் சந்தேகப் பேர்வழியை அடையாளம் கண்டு அதே நாளன்று அவரை ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்ததாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மன நலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைத்து அந்த இளைஞரின் மன நிலையை மதிப்பிட உத்தரவிடும்படி அரசு தரப்புடன் சேர்ந்து நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்போவதாக போலிஸ் கூறியது.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க இடம் உண்டு.
ஆயுள் தண்டனை இல்லை எனில் சிறைத் தண்டனையுடன் அபராதம், பிரம்படி ஆகியவையும் சேர்ந்து கிடைக்கக்கூடும்.