திருவாட்டி சியோவ் கிம் சூ, 59, என்ற ஒரு மாதை அவரின் தெலுக் குரோவ் வீட்டில் 2016 ஜூன் 7ஆம் தேதி இந்தோனீசியாவைச் சேர்ந்த தர்யாத்தி என்ற பணிப்பெண் 90 முறை கத்திகளால் குத்திக் கொன்றுவிட்டார்.
மூன்று குத்துகள் திருவாட்டி சியோ முகத்தின் எலும்புகள் முறிந்துவிடும் அளவுக்கு வேகமாக இறங்கின. கட்டாய மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டை பணிப்பெண் முதலில் எதிர்நோக்கினார். ஏப்ரலில் 17 நாட்கள் விசாரணை நடந்தது.
அதையடுத்து, கடுமை குறைந்த கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அதன் பேரில் அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தாங்கள் கேட்கப்போவதில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த பணிப்பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய சூழலை எதிர்நோக்குவார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சென்ற மாதம் ஒரு திருப்பம் ஏற்பட்டது. குற்றத்தை ஏற்றுக்கொண்டதை பணிப்பெண் மீட்டுக்கொண்டார்.
என்ன செய்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தான் மனநிலை பாதிப்புக்கு ஆளாகி இருந்ததாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதிடும்படி தற்காப்பு தரப்பு மனோவியல் வல்லுநர் டாக்டர் டோமி டான் என்பவரை பணிப்பெண் கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் தனக்கு விதிக்கப்படும் தண்டனை குறைவாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு நடக்கும். அப்போது டாக்டர் டானும் அரசு தரப்பு மனோவியல் வல்லுநர் டாக்டர் ஜேதிப் சர்கார் என்பவரும் சாட்சியம் அளிப்பார்கள்.
இந்நிலையில், திருவாட்டி சியோவை கொடூரமாக தாக்க அந்தப் பணிப்பெண் தயாரானது எப்படி என்பது நேற்று நடந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
முதலாளியிடம் இருந்து தன்பாஸ்போர்ட்டை பெறுவதற்குப் பணிப்பெண் முயன்றார். இதற்காக அவர் அந்த மாதைத் தாக்க ஆயத்தமானார். ஒரு கத்தியைக் கூர்தீட்டினார். மற்றொரு கத்தியை கழிவறைத் தொட்டிக்குக் கீழே பதுக்கி வைத்தார். வேறு ஒரு பெரிய கத்தியையும் திருவாட்டி சியோவைத் தாக்க அவர் பயன் படுத்தினார்.
அப்போது தன் செய்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில்தான் பணிப்பெண் இருந்தார் என்றும் அவருக்கு மனநிலை பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அரசாங்க தரப்பு வாதிட்டது. இதை பணிப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை.
“நான் எனது பாஸ்போர்ட்டை பெறவே விரும்பினேன். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கைகளையும் கட்டுப்படுத்த முயவில்லை,” என்று அந்தப் பணிப்பெண் சாட்சியம் அளித்தார். திருவாட்டி சியோவை கொலை செய்ய பணிப்பெண் ஆயத்தமானதைக் காட்டும் வாக்குமூலங்களை போலிஸ் தாக்கல் செய்தது.