கொவிட்-19 தொடர்புத் தடமறியும் தகவல்களை தெரியப்படுத்தாமல் இருந்தற்காக குற்றம் சாட்டப்பட்ட சீன நாட்டு தம்பதியர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி திரும்பி வர மாவட்ட நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
இதுகுறித்த உயர் நீதிமன்றத்தின் ஆய்வு இன்னமும் நிலுவையில் இருப்பதால், இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு துணை அரசு வழக்கறிஞர் திமோத்தேயஸ் கோ கேட்டுக் கொண்டதையடுத்து, 37 வயதான ஷி ஷா அவரது 39 வயது கணவர் ஹு ஜுன்னும், இன்னும் வெளியேற முடியாதநிலையில் உள்ளனர். உயர் நீதிமன்ற ஆய்வு எப்போது நடைபெறும் என்று குறிப்பிடப்படவில்லை.
ஜனவரி 22ஆம் தேதிக்கும் 29க்கு இடைப்பட்ட காலத்தில் ஹூ இருந்த இடங்கள், செயல்பாடுகள் குறித்த தொடர்புத் தடமறியும் தகவல்களைத் தெரியப்படுத்தாமல் இருந்ததற்காக இருவரும் தலா ஒரு குற்றத்தை எதிர்நோக்குகின்றனர். தொடர்பு தடமறியும் தகவல் சேகரிப்பாளர்களிடம் தவறான தகவல்களை வழங்கியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஷி எதிர்கொள்கிறார். இந்த குற்றச்சாட்டுகளின் தொடர்பாக அவர்கள் விசாரணையை கோரியுள்ளனர்.
ஷி நீண்டகால வருகை விசாவில் சிங்கப்பூரில் வசிக்கிறார் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
அவருடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஹு ஜனவரி 22ஆம் தேதி சீனாவின் வூஹானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.
ஜனவரி 31 ஆம் தேதி அவர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது, பின்னர் குணமடைந்து பிப்ரவரி 19 அன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஹூ நோய் அறிகுறி வெளியே தெரியாது இருந்தபோது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களைப் பற்றி அறிய சுகாதார அமைச்சு தொடர்புத் தடங்களை விசாரிக்கத் தொடங்கியது. அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஷிக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரி 22 முதல் 29 வரை தம்பதியர் தங்கள் தொடர்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களை வழங்கியது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தம்பதி தலா $80,000 ஜாமீனில் சிங்கப்பூரை விட்டு வெளியேற இன்று அனுமதி வழங்கப்பட்டது.