இணைய உலகில் நாடுகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் இணையப் பாதுகாப்புக்கும் தேவையான நியதித் தொகுப்பை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் எடுக்கவேண்டிய முயற்சிகள் அடங்கிய ஒரு பட்டியலை உருவாக்க ஐநாவுடன் சிங்கப்பூர் ஒத்துழைக்கும்.
தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று இதனை அறிவித்தார். கொவிட்- 19 காரணமாக மின்னிலக்க உருமாற்றம் வேகம் பிடித்து இருப்பதைச் சுட்டிய அமைச்சர், இந்தச் சூழலில் இணையப் பாதுகாப்பில் உலக ஒத்துழைப்பின் முக்கியத்துவம் கூடியிருப்பதாகத் தெரிவித்தார்.
மின்னிலக்க முன்னேற்றங்கள், மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றின் நன்மைகளை அனைத்துலக நாடுகள் அங்கீகரித்து இருப்பதாகவும் காணொளி வழி நடந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
என்றாலும் இந்த முன்னேற்றத்துக்கு ஆதரவாக பாதுகாப்பான, நம்பகத்தன்மைமிக்க மின்னிலக்க ஏற்பாடு இருப்பதை உறுதிப்படுத்த அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இணைய உலகில் பொறுப்புடன் நடந்துகொள்ள 11 நியதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கட்டாயமானதல்ல என்றாலும் அவற்றை நாடுகள் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஐநா அரசாங்க வல்லுநர்கள் குழு ஒன்று 2015ல் முன்வைத்த ‘நியதிகள் அமலாக்கப் பட்டியல்’ என்ற அந்த நியதித் தொகுப்பை ஐநா நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இவற்றை நடைமுறைப்படுத்த ஆசியான் அமைப்பு சென்ற ஆண்டு ஒரு பட்டியலைத் தயார் செய்தது. அதைப் பலப்படுத்தி நியதிப் பட்டியல் ஒன்றை உருவாக்க இப்போது முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அந்தப் பட்டியல், பல ஐநா அமைப்பு நாடுகளுக்குத் தோதாக சீரமைக்கப்படும் என்றும் இதில் நாடுகளின் தேசிய முன்னுரிமைகளும் ஆற்றல்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நியதிகளை நடைமுறைப்படுத்த தேவைப்படும் முயற்சிகள் யாவை என்பதை குறிப்பாக வளரும் நாடுகளும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆசியான் தன்னுடைய அனுபவங்களையும் அறிவையும் ஐநாவுடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.