சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் (எஸ்ஓஎஸ்) உயிர் மாய்ப்புகளைத் தவிர்க்க ஏதுவாக மன உளைச்சலில் சிக்கி இருப்போருக்கு உதவ குறுஞ்செய்திச் சேவை ஒன்றை அதிகாரபூர்வமாகத் தொடங்கி இருக்கிறது.
'எஸ்ஓஎஸ் கேர் டெக்ஸ்ட்' எனப்படும் அந்தச் சேவை இன்று உலக மன நல நாளையொட்டி தொடங்கப்பட்டது.
அந்தச் சேவையை தொடங்குவதற்கான காரியங்கள் பல மாதங்களாக நடந்துவந்தன.
பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் குறுஞ்செய்திச் சேவையை நிர்வகித்து வருகிறார்கள். அவர்கள் பயனீட்டாளர்களிடம் இருந்து வந்த 100க்கும் அதிக செய்திகளைக் கையாண்டு இருக்கிறார்கள்.
செய்திகளை அனுப்பியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 30க்கும் குறைவு.
அவர்களில் சுமார் 73% பெண்கள்.
உதவி நாடும்போது குறுஞ்செய்திச் சேவையே தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று ஆய்வு ஒன்றில் பெரும்பாலானவர்கள் தெரிவித்து இருந்ததாக இந்தச் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டது.