சிங்கப்பூரில் வேலை நிலவரங்களைப் பொறுத்த வரை இப்போதைய காலகட்டம் மிகவும் சவால்மிக்க ஒன்றாகத் தெரிகிறது. கொவிட்-19 காரணமாக இதுவரையில் தாங்கள் நினைத்துக்கூட பார்த்திடாத சூழ்நிலையை ஊழியர்கள் எதிர்நோக்குகிறார்கள்.
ஏராளமான மக்களுக்கு வேலை போய்விட்டது. ஆட்குறைப்புக்கு ஆளானவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். பலரும் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டு கிடைத்த வேலையைப் பற்றிக்கொண்டு வருகிறார்கள். மற்றவர்களோ வேலையை இழந்து புதிய சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள முடியாமல் செய்வதறியாது தவிக்கிறார்கள்.
இன்னும் ஒரு பிரிவினர் இப்போதைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி புதுப்புது தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கு ஆயத்தமாக மிகவும் நாட்டத்துடன் செயல்படுகிறார்கள். கணிசமானவர்கள் இதுவரையில் நாம் பார்த்து வந்த வேலைகள் இனி முற்றிலும் இல்லாமலேயே போய்விடுமோ என்ற கவலையில் மூழ்கி இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை வேலைச் சூழ்நிலை பற்றிய ஆகப் புதிய அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை கவலை தருவதாகத்தான் இருக்கிறது என்றாலும் மனதில் நம்பிக்கை துளிர் விடுவதற்கான அறிகுறிகளும் அதில் காணப்படுகின்றன.
ஊழியர் சந்தை தலையெடுக்கிறது என்ற நம்பிக்கையை அந்த அறிக்கை ஓரளவுக்கு கொடுத்து இருக்கிறது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரில் வேலை இல்லாதவர்கள் விகிதம் ஆகஸ்ட் மாதம் 4.5 விழுக்காடாகக் கூடி இருக்கிறது.
ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த அளவு 0.4 விழுக்காடுதான் அதிகம். ஆனால் 2009 செப்டம்பரில் உலகளவில் நிதித்துறை நெருக்கடி ஏற்பட்டபோது இருந்த அளவுக்குப் பிறகு இப்போதுதான் வேலைஇல்லா விகிதம் இந்த அளவுக்குக் கூடியுள்ளது.
இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் வல்லுநர்கள் சிலர் நம்புகிறார்கள். சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இதை நிராகரிக்க முடியவில்லைதான்.
கொவிட்-19 காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த இரண்டாவது காலாண்டின்போது பொருளியல் மிகவும் மோசமாக இறங்கிவிட்டது.
மேற்கொண்டும் இனிமேல் குறைவதற்கு வாய்ப்பில்லை என்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிய வேலைகள் அதிகமாக உருவாகும் என்பதற்கு நல்ல அறிகுறிகள் தெரிகின்றன.
அடுத்த கட்டமாக பொருளியல் மேலும் திறந்துவிடப்படும்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். அப்போது புதிய புதிய வேலைகள் அதிகம் உருவாகும் என்று நம்ப இடமுண்டு.
கிருமித்தொற்று காரணமாக படு மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் சேவைத் துறைக்கு ஓரளவுக்குப் பலம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை வர இருக்கிறது. அரசாங்கத்தின் பல திட்டங்களும் புதிய வேலைகள் உருவாகக் கைகொடுக்கும்.
ஆனாலும் இதில் மிகப் பெரும் சவால்களும் தலைதூக்கி உள்ளன. அவை குறுகிய கால சவால்களாகவே இருக்கும் என்றாலும் அவை இமாலய சவால்களாகவே இருக்கும் என்பது திண்ணம்.
புதிதாக உருவாகக்கூடிய வேலைகள், வேலை தேடுவோருக்குப் பொருத்தமாக இருக்குமா என்பதுதான் அந்தச் சவால். 'எஸ்ஜி யுனைட்டெட்' வேலை மற்றும் தேர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாத முடிவில் சுமார் 117,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவிக்கிறது. ஆனால் அவற்றில் ஏறக்குறைய 33,000 வேலைகளே எடுத்துக்கொள்ளப்பட்டன.
புதிதாக உருவான வேலைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை காலியாகவே இருக்கின்றன.
பொருத்தமான வேலைகளில் பொருத்தமான ஊழியர்களைச் சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, விருந்தோம்பல் போன்ற துறைகளில் பல வேலைகளும் காணாமல் போய்விட்டன.
அதேநேரத்தில், புதிதாக உருவாகக்கூடிய வேலைகள் தொழில்நுட்பம், நிதி, மருத்துவம் போன்ற வேறுபட்ட பொருளியல் துறைகளில்தான் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இத்தகைய சூழலில் முதலாளிகளும் ஊழியர்களும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப ஆலோசனைகளை கூறி இருக்கிறது.
ஆனால் தங்களுக்கு எத்தகைய ஊழியர்கள் தேவையோ அத்தகைய ஊழியர்களை மட்டுமே முதலாளிகள் நாடுவது வழமை. அப்படி யாரேனும் கிடைக்காவிட்டால்தான் வேலை நியமன நடைமுறைகளை அவர்கள் திருத்துகிறார்கள். இப்படி வேலையில் சேர்க்கப்படும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையும் இருக்கும்.
முதலாளிகள் இப்படி இருக்க, தங்களுக்கு இந்த வேலைதான் பொருத்தமானது என்று முடிவு செய்து அந்த வேலையைத் தேடும் போக்கே, வேலை தேடுவோரிடம் பொதுவாகக் காணப்படுகிறது.
அப்படிப்பட்ட வேலை கிடைக்கவில்லை என்றால்தான் இவர்கள் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்புகிறார்கள். இத்தகைய சூழல் இருப்பதால் உருவாகக்கூடிய வேலைகளில் ஊழியர்களைச் சேர்க்க காலம் பிடிக்கவே செய்யும்.
சிங்கப்பூரை வட்டார மையமாக மேலும் மேம்படுத்துவது, மின்னிலக்கமயத்தை வேகப்படுத்துவது, மக்களின் தேர்ச்சியைக் கூட்டுவது, இப்போது இருப்பதைவிட இன்னும் பலரையும் உள்ளடக்கக்கூடிய, மீள்திறனுடன்கூடிய பசுமைப் பொருளியலைச் சாதிப்பது போன்ற திட்டங்களைத் தீட்டி அடுத்த 10 ஆண்டு காலத்தில் பொருளியலுக்குத் தேவையான உருமாற்றத் திட்டங்களில் அரசாங்கம் ஒருமித்த கவனத்தைச் செலுத்தி வருகிறது.
கொவிட்-19 முடிந்து அந்தக் கிருமி இல்லாத ஓர் உலகம் தலையெடுக்கும்போது இந்தத் திட்டங்கள் எல்லாம் போட்டித்திறனைப் பொறுத்தவரை சிங்கப்பூருக்கு அனுகூலமான சூழலை ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி.
இவற்றுக்குத் தோதாக ஊழியர்களும் முதலாளி களும் மாறிக்கொள்வது, இப்போதைய, எதிர்கால பெரும் சவாலைச் சமாளித்து வெற்றிகரமாக மீண்டு முன்னேறிச் செல்ல உதவிகரமாக இருக்கும்.

