வேலை ஓய்வு பெற்றும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற துடிப்புடன் வேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திருமதி அரியநாச்சி அருணகிரி (73), திரு ஜெயராம் நாயுடு (73) தம்பதியர். இராணுவத்தில் நிர்வாக மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி அரியநாச்சி. ஓய்வு பெற்றபின்பும் தற்போது ஓர் உணவகத்தில் பகுதிநேர வேலையில் இருக்கிறார். முழுநேர வேலை வாய்ப்புகளை நாடி சிண்டாவின் வேலை ஆதரவுச் சந்தைக்குத் தமது கணவர் திரு ஜெயராமுடன் வந்திருந்தார்.
“முடிந்தவரை வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். என்னைப் போன்ற வயதானவர்களுக்கு இணையத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பது, இணைய வேலைச் சந்தைகளில் பங்கேற்பது போன்றவற்றைப் பற்றி அதிகம் தெரியாது.
இந்த நேரடி வேலைச் சந்தையைப் பற்றி அறிந்தவுடன் உடனே இதற்குப் பதிவு செய்தேன். சமையல், உணவக நிர்வாகம் போன்ற பணிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. இவ்வகை வேலைகளைத் தேடி வந்திருக்கிறேன்,” என்றார் திருமதி அரியநாச்சி.
இவரைப் போலவே சிண்டாவின் வேலைச் சந்தைக்கு வந்திருந்தார் திரு பெனடிக், 42. இவர் கொவிட்-19 கிருமித்தொற்றினால் கடந்த மாதம் தமது வேலையை இழந்தார். ஆங்கில ஆசிரியராக முன்பு பணிபுரிந்த இவர் தமக்கேற்ற வேலைகளை நாடி வேலைச் சந்தைகளுக்குச் சென்று வருகிறார்.
“அரசாங்கமும் சிண்டா போன்ற அமைப்புகளும் வேலை இழந்தவர்களுக்குப் பல வழிகளில் உதவி வருகின்றன. இதுபோன்ற சிரமமான காலகட்டத்தில் இத்தகைய வேலைச் சந்தைகளின் வழி நிறுவனங்களும் அமைப்புகளும் வேலை வாய்ப்புகளை மக்களுக்காக ஏற்படுத்துகின்றனர் என்பது உற்சாகத்தை அதிகரிக்கிறது,” என்றார் திரு பெனடிக்.
கொவிட்-19 கிருமித்தொற்று விளைவித்திருக்கும் பொருளியல் மந்தநிலை, மறுசீரமைப்பு, வேலை நிறுத்தங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் இந்தியர்களுக்கு உதவ சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) வேலை ஆதரவுக் கட்டமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியது.
வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு மேல் வேலை தேடலுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்க முற்பட்டுள்ளது இத்திட்டம். இந்த கட்டமைப்பு தொடர்பில் சிண்டா தலைமையகத்தில் நேற்று வேலை ஆதரவுச் சந்தை நடந்தது. இதை தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது சிண்டா. இதற்கு 180க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
“சிண்டாவின் வேலை ஆதரவுக் கட்டமைப்பின் மூலம் வேலை இல்லாதோர், வேலை இழந்தவர்கள் வாய்ப்புப் பெறுவர் என்று நம்புகிறோம். தம்மிடம் உள்ள திறன்களும் பயிற்சி நிலையும் வேலை தேடுதலுக்குப் பொருந்தாத பட்சத்தில் சிலருக்கு வேலை அமைவது கடினமாகியுள்ளது. பணி சார்ந்த திறன்களை இவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் திட்டங்களை முன்வைப்பதற்காக இந்த கட்டமைப்பை அமைத்துள்ளோம்.
“வேலைவாய்ப்புகளும் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் நம் இந்திய சமூகத்திற்கு எளிதில் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது சிண்டா. இது தொற்றுச் சூழல் சவால்களைக் கடந்து வர நாம் அனைவரும் சேர்ந்து ஒரு வலுவான சமூகமாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
“இதற்கு முன் ஜூலை மாதம் இணையம் வழி ஒரு வேலை வாய்ப்புச் சந்தையை நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய பேர் வேலை சார்ந்த உதவியை நாடி வந்தனர். அதற்கு அடுத்து இந்த நேரடி வேலை வாய்ப்புச் சந்தை. இதன்மூலம் இணையம் வழி வேலை தேடச் சிரமப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம் என்று நம்புகிறோம்,” எனத் தெரிவித்தார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
இந்த வேலைச் சந்தையில் லிஷா, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம், ‘இடுஇ குளோபல் சர்விசஸ்’ (e2e Global Services Pte Ltd), ‘மலபார் கோல்ட் & டைமெண்ட்ஸ்’ (Malabar Gold & Diamonds), ‘பூன் ஹுவாட்’ (Poon Huat), ‘டேலன்ட் மார்க்கெட் பிளேஸ்’ (Talent Marketplace) போன்ற நிறுவனங்களும் சங்கங்களும் கலந்துகொண்டு மொத்தம் 579 வேலைவாய்ப்புகளை வழங்கின.
இதோடு, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ மற்றும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனைத் திட்டம் @ வடமேற்கு இணைந்து வேலைப் பயிற்சிகள் மற்றும் மேம்பாடு சார்ந்த பட்டறைகளை நடத்தின. இந்த பட்டறைகளில் பங்கேற்றோருக்குத் தனிப்பட்ட ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுக்கான வளங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பாதுகாப்பான இடைவெளியுடன் நடந்த இந்த கண்காட்சியில் ஐந்து கூடங்களில் உணவு மற்றும் பானம், தளவாடங்கள், கல்வி, தொழில்நுட்பம், நிர்வாகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
“வேலை நேர்காணல் நிகழ்வுகளைச் சமூகத்திற்கு நேரடியாகக் கொண்டு வருவதால் மக்கள் வேலைவாய்ப்புகளையும் பயிற்சிகளையும் பற்றி எளிதில் தகவல் பெற முடிகிறது. மெய்நிகர் வேலைக் கண்காட்சிகளை அணுகவோ இணையத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ இயலாதவர்களுக்கு இத்தகைய கண்காட்சிகள் பெரிதளவில் உதவும் என்று நம்புகிறோம்.
“இந்த சவாலான காலகட்டத்தில் திறந்த மனதுடன் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலை தேடுபவர்களையும் நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கில்பெர்ட் டான்.