நுண்உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் திரு அமர் ஹசான்பாய் ஆராய்ச்சிப் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்ட இவர், கடந்தாண்டு வேறொரு வேலை தேட முடிவெடுத்தார். மனித உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வேலையாக அது அமைய வேண்டும் என்று விரும்பினார்.
முந்தையப் பணியில் எலும்பு மறுஉருவாகுதல், வளர்ச்சி தொடர்பில் முன்பு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது அதில் மிகுந்த நாட்டம் அவருக்கு இருந்தது.
அதன் தொடர்பில் அறுவை சிகிச்சையில் உடலில் பொருத்தப்படும் சாதனங்களை உருவாக்கும் நிறுவனமான ‘ஒஸ்தியோபோர்’ (Osteopore) பற்றி அறிய வந்து, அங்கு வேலைக்கு விண்ணப்பித்தார். பொருள் தரக் கட்டுப்பாடு நிர்வாகியாக அவருக்கு அங்கு வேலையும் கிடைத்தது. செய்ய இருக்கும் பணிக்கு அவரைத் தயார்ப்படுத்தும் வகையில், நிறுவனம் நிபுணத்துவ மாற்றுத் திட்டத்தில் (பிசிபி) அவரை இணைத்தது.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு வழங்கும் இந்த பிசிபி திட்டம், நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் புதிய துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற வகைசெய்கின்றது. புதிய வேலைக்குத் தேவையான மாற்றுத் திறன்களை இவர்கள் இதன் வழி கற்றுக்கொள்கின்றனர்.
பிசிபி திட்டத்தின்கீழ், மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்கள் சுமார் 100 வெவ்வேறு துறை சார்ந்த வேலைப் பயிற்சித் திட்டங்களிலிருந்து தங்களுக்குப் பிடித்ததைத் தெரிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ், அமர் சுமார் ஓராண்டு காலமாக மருத்துவத் தொழில்நுட்பப் பொறியாளர் பயிற்சியில் ஈடுபட்டார். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வெற்றிகரமாக அப்பயிற்சியை முடித்து, தம் பணியை அந்நிறுவனத்தில் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறார் மூன்று இளம் பிள்ளைகளுக்குத் தந்தையான 41 வயது அமர்.
அந்நிறுவனம் தயாரிக்கும் மருத்துவச் சாதனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் உருவாக்கப்படுவது அமரின் பொறுப்பாகும்.
“பழக்கப்பட்ட துறையில் பல ஆண்டுகள் இருந்துவிட்டு புதிய துறைக்குச் செல்வதில் பதற்றம் இருக்கவே செய்தது. ஆனால் என் திறன்கள் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டதில் எல்லாம் நன்றாக அமைந்தது,” என்று தமது புதிய வேலை பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார் அமர்.
சிங்கப்பூர் ஊழியர்கள் திறன்மிக்கவர்கள். ஆனால் மாற்று வேலை வாய்ப்புகளைத் தேடும்போது போதிய தன்னம்பிக்கையை வெளிக்காட்டாமல் போக வாய்ப்பு உண்டு என்று கூறிய அமர், ஏற்கெனவே பெற்ற வேலையிடத் திறன்கள் மற்றொரு துறைக்கு மாறும்போதும் பயன்படும் என்று விளக்கினார். உற்பத்தித் துறை தமக்கு முற்றிலும் புதிது என்றாலும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆர்வம் அவருக்கு இதுவரையில் கைகொடுத்து வருவதாக அமர் சொன்னார்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (WSG) நிபுணத்துவ மாற்றுத் திட்டம் (PCP), திறனுக்கேற்ற பணியமர்த்தும் சேவைகள் (Career Matching Services) ஆகியவற்றின் தொடர்பில் மேல்விவரம் அறிய, go.gov.sg/careeradvice7 என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியைச் சந்திக்கப் பதிவு செய்யலாம்.