பரபரப்பான வேலை-வாழ்க்கை சூழல், நேரமின்மை, புதிய நபர்களைச் சந்தித்துப் பழக போதிய வாய்ப்புகள் அமையவில்லை.
இப்படி சில நண்பர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளாததற்கு இவற்றைக் காரணமாகக் கூறுவதை 32 வயது திருமதி அனிதா பிரவின் உணர்ந்தார். தற்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகளின் நிலவரமும் சாதகமாக இல்லை. ‘டின்டர்’ போன்ற தளங்களில் பெரும்பாலானோர் மற்ற இனத்தவர்களாக இருப்பதால் போதிய இந்தியர்கள் இடம்பெறாததும் ஒரு குறையாக இருப்பதாக நண்பர்கள் கூறினர்.
வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, ஒருவரின் பண்புகளுக்கு அப்பால் வெளித்தோற்றத்துக்கு இத்தகைய தளங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அனிதாவுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உதித்ததுதான், ‘மேச்பாக்ஸ்எஸ்ஜிஐ’ (matchboxsgi) என்ற வாழ்க்கைத் துணையைத் தேடும் இணையச் சேவை. இது ‘இன்ஸ்டகிராம்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’ தளங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் அனிதா தொடங்கிய இச்சேவைக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர். சேவைக்குப் பதிவு செய்வோர் தங்களது சொந்த விவரங்களைப் பதிவுசெய்வதோடு தங்களது பின்னணி, விருப்பங்கள், திருமணத்திற்குப் பிறகு உள்ள எதிர்பார்ப்பு கள் போன்றவை குறித்த வினாக்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்குக் குறைந்தது 25 நிமிடங்கள் ஆகும்.
கொடுக்கப்படும் வினாக்களைப் பொறுத்து, தகுந்த துணையைத் தேடும் பணி தொடங்குகிறது. பொருத்தமான ஜோடி கிடைத்ததும் அந்நபரின் குணாதிசயங்கள், விருப்பங்கள் போன்ற விவரங்கள் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
ஆனால் அதில் பெயர்களோ தொடர்பு கொள்வதற்கான விவரங்களோ இடம்பெறாது. அப்படி இரு தரப்பினரும் மேற்கொண்டு பழக சம்மதித்தால் மட்டுமே அவர்களை டெலிகிராம் செயலி வழி இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். பொருத்தம் பார்த்த நபருடன் மேற்கொண்டு பழகவேண்டும் அல்லது நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனை, சேவையைப் பயன்படுத்துவோருக்கு இல்லை.
“தனிநபர் தகவல் பாதுகாப்பைக் கருதி, அவரவர் தொடர்புகொள்ளும் விவரங்கள் ஜோடிகளுக்கு தெரியாமல் இருக்கும். வருங்கால வாழ்க்கைத் துணையைச் சந்தித்து திருமணம் புரிந்துகொள்ள விரும்பும் இந்தியர்களுக்காக குறிப்பாக இச்சேவையைத் தொடங்கினேன்,” என்று தெரிவித்தார் சுகாதார தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளராக பணியாற்றும் அனிதா.
எதிர்காலத்தில் திருமணம் புரிந்துகொள்ள எண்ணம் கொண்டவர்களை மட்டும் இணைப்பதுதான் இச்சேவையின் நோக்கமென்று அவர் வலியுறுத்தினார்.
“பாரம்பரிய முறையில் பெற்றோர், உறவினர் பொருத்தம் பார்ப்பதை விரும்பாத நபருக்கு இச்சேவை ஏற்றதாக விளங்கும். ஏனெனில், துணையைத் தேட இதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது,” என்றார் அவர்.
இரு தரப்பினரும் அறிமுகமானதிலிருந்து அவர்களது உறவில் ஏதாவது பிரச்சினை அல்லது முன்னேற்றம் உள்ளதா என்பதை அறிய அனிதா அவர்களுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு நிலவரத்தை விசாரிக்கவும் செய்கிறார்.
அடுத்த கட்டமாக உணவகங்களுடன் இணைந்து, ஜோடிகள் உணவகத்தில் சந்தித்துப் பேசி, உணவு உண்ணும் வாய்ப்பினை உருவாக்கும் சாத்தியத்தை இவர் ஆராய்ந்து வருகிறார்.
இச்சேவை தொடங்கி சில மாதங்கள் மட்டுமே ஆவதால் இன்னும் திருமணம் வரை சென்ற ஜோடிகள் இதுவரை இல்லை என்று கூறிய அனிதா, கூடிய விரைவில் அதனை எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். தற்போது தாம் வழங்கும் இச்சேவைக்குக் கட்டணம் எதுவும் இல்லை.
தற்போது இம்முயற்சிக்கு பங்காளிகளையும் ஆதரவாளர்களையும் திரட்டும் பணியில் அனிதா ஈடுபட்டு வருகிறார்.
முதலில் இச்சேவையைப் பற்றி இன்ஸ்டகிராம் வழி அறிய வந்தபோது, தகவல்களைப் பாதுகாப்புடன் கொடுக்கலாமா என்ற ஐயம் நிலவியதாக சொந்தத் தொழில் நடத்தும் 27 வயது குமாரி செ.மோனிகா சரண்யா தெரிவித்தார்.
ஆனால் பிறரிடம் விசாரித்து சேவையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகு, அவர் சேவைக்குப் பதிவுசெய்தார். கடந்த மாதம் இச்சேவைக்குப் பதிவு செய்த இவருக்கு, வாழ்க்கைத் துணையாக மூவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.
“மற்ற துணை தேடும் தளங்களில், திருமணம் புரிய விரும்பாதவர்களும் அத்தகைய சேவையை அதிகம் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இச்சேவையைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் திருமணம் புரிய எண்ணம் கொண்டுள்ளவர்களாக கருதலாம். ஏனெனில் பதிவு செய்வோர் நேரத்தை ஒதுக்கி சுமார் 30 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்,” என்றார் மோனிகா.
ஓர் இந்தியரைத் திருமணம் செய்ய விருப்பம் கொண்டுள்ள மோனிகா, அத்தேடுதலுக்கு இச்சேவை வழிவகுக்கிறது என்றும் ஒருவரின் குணாதியசங்களைப் பற்றி சற்று ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிவதால் இச்சேவை தமக்குப் பிடித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சில இளையர்கள் வேலையில் அதிக ஈடுபாடு காட்டி ஒரு நல்ல பொருளாதார நிலையை எட்டும் வரையில் வாழ்க்கைத் துணைத் தேடலை ஒத்திவைத்திருக்கலாம். அவர்களைப் போன்றவர்களுக்கு இச்சேவை பேருதவியாக விளங்குகிறது என்று தெரிவித்தார் இச்சேவையைப் பயன்படுத்தும் மற்றொருவரான 32 வயது திரு ஜா.பிரேம் ஆனந்த்.
பொறியாளராகப் பணியாற்றும் இவர், நண்பர்களின் ஆலோசனையில் இச்சேவையில் இணைந்தார். சேவையின் சில அம்சங்கள் அவரைக் கவர்ந்துள்ளன.
“பெற்றோரின் ஈடுபாடின்றி முதலில் இரு தரப்பினரும் மனம்விட்டு பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. சேவை மூலம் பரிந்துரைக்கப்படும் நபர்களும் நமது விருப்பங்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சேவைக்குப் பதிவுசெய்வோர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆர்வமும் காட்டி நேரமும் ஒதுக்கினால், பலனை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன்,” என்றார் பிரேம்.
வேலையிடத்தில் தனக்கென வகுத்துக்கொண்ட இலக்குகளை முதலில் அடைந்திட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்து வரும் 30 வயது தொழில்நுட்ப ஆய்வாளர் ரா.விக்ரமன், இன்னும் வாழ்க்கைத் துணையைத் தேடும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்றார்.
இருப்பினும், அந்த தேடலில் இறங்க முடிவெடுத்தால் இச்சேவையை அவர் பயன்படுத்தக்கூடும் என்றார்.
“சிங்கப்பூர் இந்திய சமூகத்தினரிடையே பொருத்தமானவரைத் தேடும் பணியை இத்தளம் சுலபமாக்கியுள்ளது. அதோடு கேள்வி, பதில் அடிப்படையில் பொருத்தமானவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரவர் எதிர்ப்பார்ப்புகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இது இயல்பாக ஒருவரிடம் அறிமுகமாகும் அடித்தளத்தை அமைத்து தருகிறது,” என்று சொன்னார் விக்ரமன்.
இச்சேவையைப் பற்றி மேல் விவரம் அறிய விரும்புவோர், https://www.instagram.com/matchboxsgi/ என்ற இன்ஸ்டகிராம் பக்கத்திற்குச் செல்லலாம்.