சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் ஏ380 உணவகத்தில் உள்ள 900க்கும் அதிக இடங்களும் இன்று அவற்றுக்கான முன்பதிவு தொடங்கி 30 நிமிடங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. அந்த விமான உணவகம் சாங்கியில் செயல்படும். பலரும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். அவர்களுக்கும் இடம் அளிக்க எஸ்ஐஏ முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்று காரணமாக பயணத்துறை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி எஸ்ஐஏ ஓர் அறிவிப்பு விடுத்தது.
விமானச் சேவை தொடங்கவில்லை என்றாலும் பொதுமக்கள் விமானத்தில் கிடைக்கும் சேவைகளை அனுபவித்துப் பார்க்கலாம் என்று அது தெரிவித்தது.
மொத்தம் 471 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏ380ரக விமானம் சாங்கி விமான நிலையத்தில் அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உணவகமாக மாற்றப்படும் என்று அது அறிவித்தது.
மொத்தம் சுமார் 900 பேர் உணவு உண்ணலாம்.