சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் பாதுகாப்பு படச்சாதனங்களில் அத்துமீறி நுழைந்து அவற்றில் இடம்பெற்ற காட்சிகள் திருடப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
அத்தகைய காணொளிகள் ஆபாச இணையத்தளங்களில் அண்மையில் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. சிங்கப்பூரை சேர்ந்தவை என்றும் பல காணொளிகளில் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
ஒரு நிமிடம் முதல் 20 நிமிடத்திற்கும் அதிக நேரம் வரை ஓடக்கூடிய அந்தக் காணொளிகள் தம்பதியரை, தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை, சிறார்களைக் கூட காட்டுகின்றன.
வீட்டில் வரவேற்பறை, படுக்கை அறை போன்ற பல்வேறு இடங்களிலும் குடும்பத்தினர் இருப்பதை சில படங்கள் காட்டுகின்றன.
சிங்கப்பூரில் வீடுகளில் பொதுவாகக் காணப்படும் இணைய புகைப்படச் சாதனங்களில் (ஐபி) இருந்து அந்தக் காணொளிகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அல்லது வெளியில் இருந்து பிள்ளைகளை, முதியோரை, பணிப்பெண்களை, வளர்ப்புப் பிராணிகளைக் கண்காணிப்பதற்காகவும் சிங்கப்பூரில் படச்சாதனங்களை வீடுகளில் பொருத்துகிறார்கள்.
காணொளிகளைத் துல்லியமாகப் பரிசோதித்து பார்க்கையில் இத்தகைய படச்சாதனங்களில் அத்துமீறி நுழைவதற்கென்றே செயல்படும் ஒரு குழுவே இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
டிஸ்கார்ட் என்ற சமூக செய்தித்தளத்தில் காணப்படும் இந்தக் குழுவுக்கு உலகம் முழுவதும் ஏறக்குறைய 1,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதனிடையே, வீடுகளில் இத்தகைய படச்சாதனங்களைப் பொருத்தி இருப்பவர்கள், மென் பொருளைப் புதுப்பித்து வர வேண்டும் என்றும் எளிமையான மறைச்சொல்லை (passwords) வைத்திருக்கக்கூடாது என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.