கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்யவும் சமூகத்தில் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதிய $2 மில்லியன் நிதி அமைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், சூப்பர் குரூப்பின் டியோ குடும்பத்தாருடைய தனியார் முதலீட்டு நிறுவனமான ஆப்ரிகோட் கெப்பிட்டல் ஆகியவற்றால் நிதி அமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2,400 குடியிருப்பாளர்களுக்கு அடித்தள அமைப்புத் தலைவர்கள் மூலம் நிதி வழங்கப்படும்.
மரின் பரேட் குழுத்தொகுதி, ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, மவுண்ட்பேட்டன் தனித் தொகுதி, மெக்பர்சன் தனித்தொகுதி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த 500,000 குடியிருப்பாளர்கள் தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் மேற்பார்வையின்கீழ் வருகின்றனர்.
மாணவர்களுக்காக தனியாக $320,000 ஒதுக்கப்படும். இதைப் பயன்படுத்தி சிறப்புத் தேவையுள்ள மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களும் உணவு, புத்தகங்கள் போன்றவற்றை வாங்கலாம். மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாடகம் ஒன்றைத் தயாரிக்க $100,000 ஒதுக்கப்படுகிறது.
இந்த நாடகம் மூலம் இளையர்களிடையே மன வலிமையை மேம்படுத்தவும் ஆதரவுக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் சமூக மேம்பாட்டு மன்றம் இலக்கு கொண்டுள்ளது. மனநல நோயாளிகளுக்கும் அவர்களைப் பார்த்துக்கொள்வோருக்கும் ஆதரவு வழங்குவது பற்றி விளங்கும் மனநலப் பயிற்சிகளும் பயிலரங்குகளும் நடத்தப்படும். இதற்காக $80,000 ஒதுக்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் வேலை கிடைக்காமல் சிரமப்படும் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களுக்கு உதவ $300,000 ஒதுக்கப்படுகிறது.