வளர்ச்சி அடையவும் உற்பத்தித்திறனைப் பெருக்கவும் வெளிநாடுகளில் விரிவடையவும் விரும்பும் நிறுவனங்கள் விரைவில் அதிக மானியங்கள், விரிவுபடுத்தப்பட்ட கடன் ஏற்பாடுகள் மூலம் நன்மை அடையலாம்.
கொவிட்-19 சூழலில் நிறுவனங்களுக்கு அதிக ஆதரவை அளித்து அவை உருமாறிக்கொள்ள உதவும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று இதனை தெரிவித்தார்.
அமைச்சர், நிறுவனங்களுக்கு உரிய பல மானியத் திட்டங்களும் கடன் ஏற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார்.
அதன்படி அனைத்துலகமயமாக விரும்பும் நிறுவனங்கள் நவம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரையில் 80% வரைப்பட்ட செலவுக்கு மானியம் பெறலாம். சந்தை ஆயத்த உதவி மானியம் மூலம் இது கிடைக்கும்.
இந்த உதவி, மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சிகளில் கலந்துகொண்டு நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டுஅறியவும் ஊக்கமூட்டும் என்று திரு சான் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
சில்லறை வர்த்தகர்கள் வெளிநாடுகளில் விரிவடைவது மிகவும் விவேகமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக இப்போது கிடைக்கக்கூடிய அதிக ஆதரவு ஜனவரி 1 முதல் கூடுதலாக மேலும் ஒன்பது மாதங்களுக்குக் கிடைக்கும்.
தொழில்முனைப்பு மேம்பாட்டு மானியம், உற்பத்தித்திறன் தீர்வு மானியம் ஆகியவை மூலம் நிறுவனங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை 80% அளவுக்கும் அதற்குப் பிறகு 70% அளவுக்கும் மானியம் பெறமுடியும்.
கடன்பெற முயலும் நிறுவனங்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், கட்டுமான நிறுவனங்கள் காப்புறுதி பாதுகாப்பு பெற்ற உள்நாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான பணத்தைக் கடனாகப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதில் குறைந்தபட்சம் பாதிப் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். இந்த ஏற்பாடு 2022 மார்ச் 31 வரை நடப்பில் இருக்கும்.
குறைந்த வட்டியில் நடைமுறை மூலதனத்தைப் பெறுவதற்கு வகை செய்யும் தற்காலிக குறுகியகால கடன் திட்டமும் வர்த்தகக் கடனுக்கான நிதித்திட்டமும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 வரை நடப்பில் இருக்கும்.
இந்தத் திட்டங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுகின்றன என்றார் திரு சான்.
இதனிடையே, சிங்கப்பூர் நாணய ஆணையம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வகை செய்யும் ஒரு திட்டத்தை 2021 ஏப்ரல் முதல் 2021 செப்டம்பர் வரை ஆறு மாத காலம் நீட்டிக்கப்போவதாகத் தெரிவித்தது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கொவிட்-19 தொற்றுக்கு முன்பாகவே இணைய வர்த்தகம் அதிகரித்து வருவது போன்ற பல சவால்களை எதிர்நோக்கி இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 காரணமாக இந்தத் தொழில்துறை மேலும் பாதிக்கப்பட்டுவிட்டது.
சில்லறை வர்த்தகம் முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்காண்டு அடிப்படையில் கடந்த மே மாதம் 52.1 விழுக்காடு குறைந்துவிட்டது என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உருமாறிக்கொண்டு தொடர்ந்து நிலைத்திருக்க மூன்று வழிகள் முக்கியம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் புதிய தேவைக்கேற்ப அவை மாறிக்கொள்ள வேண்டும், உள்நாட்டு விற்பனையை மட்டும் சார்ந்திருக்க முடியாது, சேவை, வடிவமைப்பு ஆகியவற்றிலும் அவை கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.