சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் நால்வருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,884ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நால்வரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. நேற்று நண்பகல் நிலவரப்படி சமூக அளவில் எவருக்கும் பாதிப்பில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதி களில் புதிதாக எவருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட 64 வயது ஆடவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நிரந்தரவாசியான அந்த ஆடவர் கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் மரணம் அடைந்த 28வது நபராவார். இதற்கு முன் கடந்த மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரில் இந்நோயால் உயிரிழப்புகள் நிகழவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இந்தியாவில் பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பியபோது அவருக்கு வீட்டிலேயே இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக இம்மாதம் 4ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது. மாண்ட ஆடவரின் குடும்பத்தாருடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனை தொடர்புகொண்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவி களை அது செய்து வருகிறது.
இதற்கு முன் ஆகக் கடைசியாக கிருமித்தொற்று காரணமாக 62 வயது ஆடவர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று மாண்டார்.
நேற்று முன்தினம் மேலும் நால்வருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. சமூக அளவில் ஒருவர் பாதிப்படைந்தார். அவர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் என்று சுகாதார அமைச்சு கூறியது.
ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருடன் அப்பெண் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மூவரும் கடந்த மாதம் 16ஆம் தேதியன்று இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தனர். சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் உத்தரவு பிறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கிருமித்தொற்றிலிருந்து 23 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
இதன்மூலம் சிங்கப்பூரில் இதுவரை 57,713 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குணமடைந்து வரும் 76 பேர் சமூக மருத்துவமனைகளில் தங்குகின்றனர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் வேறு உடல்
நலப் பிரச்சினைகள் காரணமாக இறந்தனர்.