கொவிட்-19 கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களையும் நோய் தொற்றும் அதிக சாத்தியம் உள்ளவர்களையும் பாதுகாப்பதில் அரசாங்கம் தனது நோய் தடுப்பு அணுகுமுறையில் முன்னுரிமை வழங்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி கிடைக்கும்போது அதனை அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு எப்படி வழங்கத் திட்டமிடுகிறது என அங் மோ கியோ குழுத்தொகுதிய் நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ கேட்ட கேள்விக்கு திரு கான் அளித்த எழுத்துபூர்வ பதிலில் இவ்வாறு கூறினார்.
தடுப்பூசிகளின் எண்ணிக்கை, மக்கள்தொகையின் பல்வேறு பிரிவுகளுக்கு எந்தெந்த ஊசிகள் ஏற்புடையவை போன்ற அம்சங்களின் அடிப்படையில் அரசாங்கம் இதற்கான உத்தியை வகுத்து வருவதாகத் தெரிவித்த திரு கான், எளிதில் பாதிப்படையக்கூடியவர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், சிங்கப்பூரிலுள்ள அனைவருக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.