கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 31,700 பேருக்கு சிங்கப்பூர் நிரந்தர வாசத் தகுதி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த எண்ணிக்கை நிலையாகத் தொடருவதாகவும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேபோல இதே காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 22,100 புதிய குடிமக்கள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் பெற்றோர்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 1,600 குழந்தைகள் பிறப்பதாகவும் குமாரி இந்திராணி கூறினார்.
புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி உறுப்பினர் லியாங் எங் ஹுவாவும் செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் குமாரி போ லி சானும் எழுப்பிய வினாக்களுக்கு அவர் பதிலளிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பெரும்பாலான வளர்ந்த பொருளியல் நாடுகளில் உள்ளதுபோல சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் மொத்த பிள்ளைபிறப்பு விகிதமும் 2.1 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளதென்றும் அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டும் அதற்கு முந்திய ஆண்டும் அந்த விகிதம் 1.14 விழுக்காடு என்றே தொடருவதாகவும் அவர் கூறினார்.
“மக்கள்தொகையைப் பொறுத்தவரை சிங்கப்பூருக்கு எந்தவோர் இலக்கோ குறிப்பிட்டதொரு எண்ணிக்கையை அடைய வேண்டும் என்ற எண்ணமோ இல்லை,” என்று எடுத்துரைத்தார் தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சருமான குமாரி இந்திராணி.
“பிறப்பு விகிதம், ஆயுட்காலம் போன்ற பல்வேறு காரணிகளால் சிங்கப்பூர் மக்கள்தொகையின் அளவு பாதிக்கப்படுகிறது. அவற்றுடன் உலக நிலவரங்கள் குடிநுழைவையும் வேலைவாய்ப்பையும் பாதிக்கின்றன.
“சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள்தொகை அளவு 2030ஆம் ஆண்டுவாக்கில் 6.9 மில்லியனுக்கும் குறைவாகவே இருக்கக்கூடும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு அரசாங்கம் ஒரு மதிப்பீட்டை தெரிவித்தது. அந்தக் கணிப்பு இன்றைக்கும் மாற்றமின்றி தொடருகிறது.
“சிங்கப்பூரைத் தங்கள் இல்லமாக ஆக்கிக்கொண்டு இங்குள்ளவர்களுடன் ஒன்றுகலந்து நாட்டுக்குப் பங்களிக்கக் கடப்பாடு கொண்டவர்களுக்கே குடியுரிமையும் நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரர்களுடன் குடும்ப உறவுகளைக் கொண்டோர் அல்லது இங்கு சில காலம் தங்கி, படித்து, வேலை செய்வோர் புதிய குடிமக்கள் ஆகிறார்கள். குடியுரிமை பெற தீவிர கடப்பாடு கொண்ட, தகுதியுள்ள நிரந்தரவாசிகளில் இருந்து புதிய குடிமக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்,” என்று மன்றத்தில் விளக்கினார் அமைச்சர் இந்திராணி ராஜா.