இவ்வாண்டு மறுவிற்பனைச் சந்தையில் கைமாறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில், குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்ட வீடுகள் 0.3 விழுக்காடு மட்டுமே என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் நிலவரப்படி கைமாறிய 14,400 மறுவிற்பனை வீடுகளில் 38 வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்பனையாகின.
குறிப்பிட்ட சில குடியிருப்புப் பேட்டைகளில் வீவக வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்டது குறித்து அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ கேட்ட கேள்விக்கு திரு லீ பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
கடந்த மாதம் எட்டு வீவக மறுவிற்பனை வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு கைமாறியதாக சொத்து நிறுவனமான எஸ்ஆர்எக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. தஞ்சோங் பகாரில் ‘தி பினக்கல்@டக்ஸ்டன்’ கட்டடத்தில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று ஆக அதிகமாக $1.26 மில்லியனுக்கு விலை போனது.
கடந்த ஆண்டு 64 வீடுகளும் 2018ல் 71 வீடுகளும் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீட்டு விலை குறித்துப் பேசிய அமைச்சர் லீ, அவை இடைநிலை வருடாந்திர குடும்ப வருமானத்தைவிட ஐந்து மடங்கிற்கும் குறைவாக இருப்பதாகச் சொன்னார். ஒப்புநோக்க, உலகின் மற்ற முக்கிய நகரங்களில் வீட்டு விலை வருடாந்திர குடும்ப வருமானத்தைவிட கிட்டத்தட்ட 10 அல்லது 20 மடங்காக உள்ளதை அவர் சுட்டினார்.
புதிய வீட்டு விலையை நிர்ணயிப்பதில், அந்த வீட்டின் சிறப்பம்சங்கள், அக்கம்பக்கத்தில் உள்ள மறுவிற்பனை வீட்டு விலை, சந்தை நிலவரம் போன்ற அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
முதன்முறையாக வீடு வாங்குவோர், $80,000 வரையிலான மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத்தைப் பயன்படுத்தலாம் என்றார் திரு லீ.
இதற்கிடையே, இவ்வாண்டு முதற்பாதியில் விற்பனைக்கு விடப்பட்ட 1,000 ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடுகளில் ஏறக்குறைய 80 விழுக்காடு விற்கப்பட்டுவிட்டதாக தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை ஒற்றையர்களும் மூத்தோரும் வாங்கியதாக அவர் சொன்னார்.
ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ‘பிடிஓ’ திட்டத்தில் மேலும் 1,800 ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
வீட்டுக் கடன் தவணை: 2,500 குடும்பங்களுக்கு வீவக உதவி
இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, வீட்டுக் கடனைச் செலுத்த ஏறத்தாழ 2,500 குடும்பங்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உதவியதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.
அவற்றில் 864 குடும்பங்கள் வீட்டுக் கடன் தவணையை ஒத்திவைத்தன. மேலும் 277 குடும்பங்கள் செலுத்தும் மாதாந்திரக் கடன் தொகையைக் குறைத்துக்கொண்டன.
கொவிட்-19 சூழலால் ஆட்குறைப்பு, வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் தவணையை ஒத்திவைக்க எத்தனை குடும்பங்கள் வீவகவிடம் கோரியுள்ளன என்பது குறித்து அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இங் லிங் லிங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் லீ அளித்த எழுத்துபூர்வ பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.