ஊழியர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் திட்டங்கள் மூலம் கடந்த ஆண்டு ஏறத்தாழ 7,000 பேர் பணியமர்த்தப்பட்டதாக கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களின்கீழ் ஊழியர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவளிக்கும் நிபுணத்துவ உருமாற்றுத் திட்டங்களின்கீழ் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இயோ சூங் காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் கேட்ட கேள்விகளுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்தபோது திருமதி கான் இதனைத் தெரிவித்தார்.
ஊழியர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியமர்த்தும் திட்டங்கள் மூலம் கடந்த ஆண்டு மேலும் 2,400 பேர் வேலையில் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்களில் பங்கேற்றோர் பயிற்சி வழங்குநர்களிடமிருந்து பயற்சி பெற்று பின்னர் பணியமர்த்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்து திரு யிப் கல்வி அமைச்சிடம் கேட்டார். பயிற்சித் திட்டங்களின் முடிவு குறித்து அமைச்சு எவ்வாறு கணக்கிடுகிறது என்பது குறித்தும் அவர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திருமதி கான், பயிற்சி வகுப்புகளின் தரத்தைக் கண்டறிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு கருத்தாய்வுகளை நடத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும் வேலை, கல்வித் திட்டம் தொடர்பிலும் ஆய்வு நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு வேலை, கல்வித் திட்டத்தை முடித்த ஆறு மாதங்களில் 87 விழுக்காட்டினர் முழு நேர வேலையில் சேர்ந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.