பருமனைக் குறைக்க வைப்பதற்கான மாத்திரை ஒன்றுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மோன் மச்சா கொக்கோ என்னும் அந்த மாத்திரையில் உள்ள ரசாயனப் பொருள் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சோதனையில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் முன்னதாக சிபுட்ராமின் என்னும் மருந்து, உடல் இளைப்புக்காக பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அது 2010ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. சிபுட்ராமின் மருந்து உண்பவர்கள் தூக்கமின்மை, காதுகேளாமை, மனக்கோளாறு போன்ற பக்கவிளைவுகளால் அவதிப்பட்டதையடுத்து அந்த மருந்துக்குத் தடை செய்யப்பட்டது.
அதேபோல் இப்போது மோன் மச்சா மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த மருந்தை வாங்கி வைத்திருந்து பயன்படுத்தி வருபவர்கள் அதை உடனடியாக நிறுத்திவிடுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மாத்திரையை உட்கொண்ட பலர், அதிகளவில் தாகமெடுப்பது, இதயம் வேகமாகத் துடிப்பது போன்ற அனுபவங்களைப் பெற்றதாக புகார்கள் வந்ததாக ஆணையம் தெரிவித்தது. அதேபோல் இந்த மாத்திரையை வழக்கமாக உட்கொண்ட இன்னொருவர் கூறிய புகாரின் அடிப்படையில், உடல்கொழுப்பைக் குறைப்பதற்குப் பதில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதும் தெரியவந்தது. இந்த மாத்திரை க்யூ10, கரௌசெல், லஸாடா ஆகிய இணைய வர்த்தகத் தளங்கள் மூலமும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமும் விற்கப்பட்டு வந்தன.
மோன் மச்சா கொக்கோ மாத்திரைகளை விற்பதை உடனடியாக நிறுத்தும்படி விற்பனையாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கும் அந்தப் பொருட்கள் பற்றிய விவரங்களை நீக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத்திரையைத் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தவர்கள், உடல்நிலையில் மாற்றம் ஏதும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. “உடல் எடையைக் குறைப்பது என்பது மிக எளிதாக, உடனடியாக நடக்கும் செயல் அன்று. அதற்கு சீரான உணவுப் பழக்கமும் தேவையான உடற்பயிற்சியும் வேண்டும். அவையே உடல் எடையைக் குறைக்க உதவும்,” என்று ஆணையம் தெரிவித்தது.