பொழுதைக் கழிக்கவும் பிற காரணங்களுக்காகவும் சிங்கப்பூர்- ஹாங்காங் இடையே இருதரப்புப் பயணங்களை அனுமதிக்கும் வகையில் சிறப்புப் பயண ஏற்பாட்டிற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்வோர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிராது. அதே வேளையில், பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு கிட்டி இருக்க வேண்டும் என்பது போன்ற வேறு சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம்.
இது சிறிய அளவிலான நடவடிக்கை என்றபோதும் விமானப் போக்குவரத்து மையங்களாகத் திகழும் இவ்விரு நாடுகளைப் பொறுத்த மட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
இரு நாடுகளிலும் கொவிட்-19 பரவல் அபாயம் குறைவாக இருப்பதை அமைச்சர் ஓங் சுட்டினார். உடன்பாட்டின்படி, புறப்பாட்டிற்கு முன் பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது. யார் யார் பயணம் செய்யலாம், பயணத் திட்டம், பயண நோக்கம் என வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இராது.
ஹாங்காங்கில் அல்லது வேறு நாடுகளில் தொற்று கூடினால் சிங்கப்பூர் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “பொதுவான புரிதல் இருக்க வேண்டும். எல்லாருமே கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம். ஆயினும், எதிர்பாராதவிதமாக கிருமித்தொற்று அதிகரித்தால், பயண ஏற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்,” என்று திரு ஓங் பதில் கூறினார்.
இந்தத் திட்டம் படிப்படியாகவும்முன்னெச்சரிக்கையுடனும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனாலும் நமது விமானப் போக்குவரத்துத் துறையைத் திறக்க வேண்டியுள்ளது. அதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ள பத்தாவது நாடு ஹாங்காங்.
இதற்குமுன் நியூசிலாந்து, புருணை, ஆஸ்திரேலியா (விக்டோரியா மாநிலம் தவிர்த்து), வியட்னாம், மலேசியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனீசியா போன்ற நாடுகளுடன் சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது.
ஹாங்காங்கில் இதுவரை 5,200க்கு மேற்பட்டவர்களை கொரோனா தொற்றிவிட்டது; 105 பேர் இறந்துவிட்டனர்.