சிங்கப்பூரின் விளையாட்டு தொழில்துறைக்கு மேலும் ஊக்கமூட்டும் வகையில் $25 மில்லியன் விளையாட்டு மீள்திறன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் $13.5 மில்லியன் செயல்சார்பு மானியமாக நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும். இது அக்டோபர் முதல் 2021 மார்ச் வரை கிடைக்கும். $11.5 மில்லியன் தொகை இந்தத் தொழில்துறையின் ஆற்றலைப் பெருக்குவதற்காகச் செலவிடப்படும்.
இந்தக் கூடுதல் உதவியையும் சேர்த்து விளையாட்டுத் தொழில்துறைக்கு அரசாங்கம் $50 மில்லியன் ஆதரவு அளிக்கிறது.
இந்தத் துறைக்கு கடந்த ஜூன் மாதம் $25 மில்லியன் நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் வலுவான விளையாட்டு வீரர்கள் அணியைப் பலப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த முயற்சிகளில் பல அமைப்புகளும் முக்கியமான பங்காற்றுவதாகக் குறிப்பிட்ட திரு டோங், புதிய ஊக்குவிப்புத் திட்டத்தின் செயல்சார்பு மானியத்திற்கான நிபந்தனைகளும் நடைமுறைகளும் நவம்பரில் அறிவிக்கப்படும் என்றார்.
இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த பல துறைகளில் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கும் சுயவேலை பார்ப்போருக்கும் ஆதரவு கிடைக்கும்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்குப் பயிற்சி ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
சிங்கப்பூரில் விளையாட்டுகளுக்கும் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் $400 மில்லியனை அரசாங்கம் முதலீடு செய்கிறது.