சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியம் என்ற பொதுவான ஓர் ஏற்பாட்டை நடப்புக்குக் கொண்டு வரலாம் என்று பாட்டாளிக் கட்சி யோசனை தெரிவித்து உள்ளது.
ஆனால் அந்த யோசனையை அமல்படுத்தினால் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுவிடும் என்று என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் விளக்கினார். அத்தகைய குறைந்தபட்ச ஊதிய முறை இருந்தால் அது தேர்தலில் வாக்குவேட்டைக்கான பேரமாகிவிடும் என்றாரவர்.
துப்புரவு, பாதுகாவல், நிலவடிவமைப்பு ஆகிய தொழில்துறைகளைப் பொறுத்தவரையில் படிப்படியாக உயரும் சம்பள முறை கட்டாயமானதாக இருக்கிறது. அரசாங்கத்தின் இந்தக் கொள்கை காரணமாக, குறைந்த ஊதிய ஊழியர்களில் பெரும்பாலானோர் மாதம் $1,300க்கும் அதிக தொகையைச் சம்பளமாகப் பெறுகிறார்கள். இதர துறைகளில் உள்ள இத்தகைய ஊழியர்களின் சம்பளம் உயரவும் அரசாங்க கொள்கைகள் உதவி வந்திருப்பதாக டாக்டர் கோ விளக்கினார்.
கொவிட்-19க்கு பிறகு இன்னும் வலுவான நாடாக மீண்டு எழுவதற்கான அரசாங்கத்தின் உத்திகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் பாட்டாளிக் கட்சியின் குறைந்தபட்ச சம்பள யோசனை பற்றி விவாதிக்கப்பட்டது.
எல்லா துறைகளுக்கும் குறைந்தபட்சம் $1,300 சம்பளம் என்று நிர்ணயிக்கலாம் என பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றது.
இதற்கு ஆதரவாக நேற்று பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங்கும் அந்தக் கட்சியின் இதர இரண்டு உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். மசெக உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் சேர்ந்துகொண்டனர். எல்லாருக்கும் ஏற்புடைய குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது சிரமமானது என்று சுகாதார மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோ குறிப்பிட்டார்.
குறைந்தபட்ச சம்பள ஏற்பாடு நடப்பில் இருந்தால் அரசியலில் அது பிரதிபலிக்கும். வாக்குகளைப் பெறும் நோக்கத்துக்கு அது பயன்படுத்தப்படலாம் என்றும் டாக்டர் கோ விளக்கினார். அத்தகைய ஓர் ஏற்பாடு நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாகாத நிலையை ஏற்படுத்திவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் குறைந்த வருமான ஊழியர்களின் வேலைகளுக்கும் ஆபத்து வரலாம் என்று டாக்டர் கோ எச்சரித்தார்.
இதற்குப் பதிலளித்த பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை சுயேச்சையான ஒரு குழு நிர்ணயிக்கலாம் என்றும் குடும்பத்தின் சராசரி செலவினம் போன்ற புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு அது நிர்ணயிக்கப்படலாம் என்றும் இதன் மூலம் அப்படிப்பட்ட ஒரு நிலையை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் வாதிட்டனர்.
படிப்படியாக உயரும் சம்பள முறை கட்டாயமாக இல்லாத தொழில்துறைகளைப் பொறுத்த வரையில் அந்தத் துறைகளுக்குத் துறைவாரியான சம்பள அளவீடுகளை நிர்ணயிக்கலாம் என்றும் டாக்டர் கோ யோசனை கூறினார்.
குறைந்த ஊழியர்களுக்கு உதவ மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும், செய்ய முடியும். ஆனால் இதில் பிரச்சினையை மேலும் பெரிதாக்கிவிடக்கூடாது என்ற டாக்டர் கோ, குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு உதவி அவர்களைக் கைதூக்கிவிடுவதுதான் எப்போதுமே மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தின் அடிப்படை இலக்காக இருந்து வந்துள்ளது என்பதைச் சுட்டினார்.