சிங்கப்பூரில் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் பரவலாக நடைமுறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் ஏற்பாட்டை 85% முதலாளிகள் முறையாக அல்லது அப்போதைக்கு அப்போது நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் ஸக்ரியாவுக்குப் பதில் அளித்து அமைச்சர் பேசினார்.
வீட்டில் இருந்து வேலை செய்வது, பகுதி நேர வேலை, மாறுபட்ட வேலை நேரம் ஆகியவை அத்தகைய ஏற்பாட்டில் உள்ளடங்கும். அத்தகைய ஏற்பாடுகள் தொடர்பான முத்தரப்பு அளவீட்டை 7,000க்கும் அதிக நிறுவனங்கள் நடப்புக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் திருவாட்டி கான் கூறினார்.
இந்தத் தரத்தை உறுதிப்படுத்தும் வழிகாட்டி நெறிமுறைகளை மனிதவள அமைச்சும் என்டியுசியும் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் உருவாக்கி இருக்கின்றன.
வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் இடையில் சிறந்த சமநிலையை ஊழியர்கள் கட்டிக்காக்க உதவியாக வேலை இடத்தில் நல்ல வேலை நியமன நடைமுறைகள் இருப்பதை அந்த முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை நடப்புக்குக் கொண்டுவரும்படி தனது அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்றும் திருவாட்டி கான் தெரிவித்தார்.
வேலை இடத்துக்குத் திரும்பும்படி முன்னிலும் அதிகமான ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள் என்றாலும் சில முதலாளிகள் தங்கள் ஊழியர்களை தேவைப்படும்போது மட்டும் அலுவலகம் வந்தால் போதும் என்று சொல்லி வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அனுமதித்து இருக்கிறார்கள் என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.
nவீட்டில் இருந்து வேலை செய்வது சில சூழ்நிலைகளில் சாத்தியமற்றது என்றாலும் தனது அமைச்சு நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை தொடர்ந்து ஊக்குவித்து வரும் என்று திருவாட்டி கான் நேற்று நாடாளு மன்றத்தில் குறிப்பிட்டார்.