இம்மாதம் 20ஆம் தேதியில் இருந்து பொது நூலகங்களில் அமர்ந்து படிக்கவும் நாளிதழ்களை வாசிக்கவும் முடியும்.
இருக்கைகளும் மின்நாளிதழ்கள் மற்றும் பல்லூடக நிலையங்கள் உள்ளிட்ட வாசிப்புப் பகுதிகளும் திறந்துவிடப்படும் என்று தேசிய நூலக வாரியம் நேற்று ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அனுமதி, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் ஆகியவை நடப்பில் இருக்கும்.
இப்போதுள்ள 30 நிமிட நேர வரம்பு, ஜூரோங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் வட்டார நூலகங்களில் மூன்று மணி நேரம் வரையும் மற்ற பொது நூலகங்களில் இரண்டு மணி நேரமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள வாசிப்புக் கூடம் திறந்துவிடப்படும்.
நூலகங்களில் பொது நிகழ்ச்சிகளும் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும். நூலக வாரியத்தின் 'கோ லைப்ரரி' இணையப் பக்கத்தில் அந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைக் காணலாம்.

