கொவிட்-19 தொற்றுநோய் பரவல் சூழலில் சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் வேலையில் இருப்பதற்கு உதவும் முயற்சியாக அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரிக்கப்பட உள்ளது. இது அவர்கள் வாய்ப்புகளை அதிகம் பெற உதவும்.
ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவை (ஏஐசி) அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் சங்கம், டான் டோக் செங் மருத்துவமனை ஆகிய இரண்டு கூடுதல் கற்றல் நிறுவனங்களை நியமிக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
இவற்றுடன், ஏஐசி கட்டமைப்பில் மொத்தம் எட்டு கற்றல் நிறுவனங்கள் அடுத்த நான்கு ஆண்டு களுக்கு ஆண்டுக்கு சுமார் 11,000 பயிற்சி இடங்களை வழங்கும்.
“மாறி வரும் காலத்துக்கு ஏற்ப, சமூகப் பராமரிப்புத்துறை ஊழியர்கள் எதிர்காலத்திற்கு தேவையான திறன்களைப் பெற்று, தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பராமரிப்புத்துறை ஊழியரும் தொடர்ச்சியான கல்வியும் திறன்களை மேம்படுத்துவதற்கும் திறன் மேம்பாட்டிற்கும் திறந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம், மூத்த குடிமக்களைப் பராமரிப்பதற்குத் தேவையான திறன்களை அவர்கள் பெற்றிருப்பார்கள்,” என்றார் அவர்.
மெய்நிகராக நடைபெற்ற சமூகப் பராமரிப்பு மனிதவள மேம்பாட்டு விருது சிசிஎம்டிஏ வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு டாக்டர் கோ பேசினார். இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 100 பேர் விருதுகளைப் பெற்றனர்.
இந்தத் திட்டம் சமூகப் பராமரிப்புத் துறையில் புதிதாகச் சேர்பவர்களுக்கும் ஏற்கெனவே இத்துறையிலுள்ள ஊழியர்களுக்கும் பயிற்சி ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.
விருது பெறுபவர்கள் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் இலவசமாகக் கலந்து கொள்ள முடியும். சிசிஎம்டிஏ மற்றும் அவர்கள் பணிபுரியும் சமூகப் பராமரிப்புத் துறை சார்ந்த நிறுவனமும் இணைந்து அவர்களுக்கு பயிற்சி நிதியை வழங்கும். முழுநேர படிப்பைத் தொடரும் ஊழியரின் பணிகளைச் செய்ய, தற்காலிக ஊழியரை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களுக்கும் சிசிஎம்டிஏ நிதி வழங்கும்.
தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சான்றிதழ் (நைடெக்) படிப்பு முதல் மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத துறைகளில் முதுநிலைப் பட்டக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் திறன்மேம்படுத்துதலை இத்திட்டம் கொண்டிருக்கிறது.
நிபுணத்துவ மேம்பாட்டுப் படிப்புகளும், உள்ளூர் அல்லது வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு, சமூக பராமரிப்புத் துறைகளில் பயிற்சிக் கல்வியைப் பெறுவதும் இதில் அடங்கும். இவ்விருதைப் பெறுவோர், பட்டப்படிப்பை முடித்தவுடன் அவர்கள் வேலை பார்க்கும் சமூகப் பராமரிப்பு சேவை வழங்குவோருக்கு வேலை பார்க்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
“இந்தத் தனிமனிதர்கள் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவுவதை இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், சமூகத்தில் முதியோர் மகிழ்ச்சியோடு முதுமையடைவதில் இவர்களால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவை குறிப்பிட்டது.
“சமூகப் பராமரிப்புத் துறை மாற்றமடைந்து வரும் வேளையில், இத்துறை சார்ந்தோர் தொடர் கல்வியைப் பெறவும், பழக்கமானதிலிருந்து தைரியமாக வெளியே வர ஊக்கமூட்டுகிறேன். வேகமாக வளர்ந்து வரும் சமூக பராமரிப்புத் துறைக்கு இவர்கள் ஏற்புடையவர்களாகத் திகழ முடியும். முதியோருக்கு நல்ல பராமரிப்பை வழங்க முடியும்,” என்று டாக்டர் கோ கூறினார்.
சிசிஎம்டிஏ 2017இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 380க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கியுள்ளது. விருது பெற்றவர்களில் பெரும்பாலோர் சமூக பாதுகாப்புத் துறையின் தற்போதைய ஊழியர்கள். 15 விழுக்காட்டினர் இத்துறையில் புதிதாகச் சேர்ந்தவர்கள். தாதிமை, உடலியக்கப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.