ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பின்போது இன அடிப்படையில் சலுகை காட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுவது பொய்யான, ஆதாரமற்ற கருத்து என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 31 வயது திரு சதீஷ் நோயல் கோபிதாஸ் மரணமுற்றார்.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை விதிக்கும்போது, இன அடிப்படையிலான சலுகை அளிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவுவதை தான் அறிந்திருப்பதாக அந்த அலுவலகம் நேற்று கூறியது.
“தீவிர விசாரணைக்குப் பிறகு ஆறு பேர் அச்சம்பவத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் அவர்களின் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. டான் சென் யாங் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை,” என்றும் அந்த அலுவலகம் தெளிவுபடுத்தியது.
“எந்த ஒரு சமயத்திலும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் போலிசும் மாண்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் இனத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை,” என்றும் அது கூறியது. ஜோயல் டான், ஆங் டா யுவான், நெட்டலி சியாவ் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.