பூன்லே வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகைப்பொருள் தொகுப்பு நேற்று இலவசமாக வழங்கப்பட்டது. எண்ணெய் நிறுவனமான எக்சான்மொபில், தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் கொண்டுள்ள பங்காளித்துவத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த மளிகைப்பொருள் தொகுப்பு விநியோகம் இடம்பெற்றது.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவை ஒருங்கிணைப்புக்கு தலைமைதாங்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீயும் தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங்கும் எக்சான்மொபில் மற்றும் பூன்லே அடித்தள அமைப்புகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள் 25 பேருடன் சேர்ந்து நேற்று காலையில் பூன்லே வட்டாரத்தில் உள்ள வாடகைக் குடியிருப்புகளில் வீடு வீடாகச் சென்று அந்த மளிகைப்பொருள் தொகுப்புகளை வழங்கினர்.
பூன்லே வட்டாரத்தில் உள்ள, எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், 'அடாப்ட் அட் பூன்லே' எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டில் $40,000 மதிப்புள்ள அந்த மளிகைப்பொருள் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
ஆண்டுதோறும் இப்படி மளிகைப்பொருள் தொகுப்புகளை வழங்கிவரும் எக்சான்மொபில், இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக முகக்கவசங்களையும் கைச்சுத்திகரிப்பான்களையும் சேர்த்து வழங்கியது.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை வழங்கப்பட்ட மளிகைப்பொருள் தொகுப்புகளின் மதிப்பு 50% அதிகம் எனக் கூறப்பட்டது.
"குறைந்த வருமானம் ஈட்டுவோர் எதிர்கொண்டு வரும் சவால்களை கொரோனா பரவல் மேலும் அதிகப்படுத்தியுள்ளபோதும், அனைவருக்கும் உதவி சென்றடையும் விதமாக எங்களது பங்காளிகளுடன் இணைந்து, வளங்
களைத் திரட்டியும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியும் வருகிறோம்," என்று திருவாட்டி லோ யென் லிங் சொன்னார். உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விநியோகிக்க தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் கைகொடுத்தனர் என்றும் சமூகத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த கடப்பாடு கொண்டுள்ளோம் என்றும் எக்சான்மொபில் நிறுவனத்தின் இயக்குநர் திருவாட்டி ஜெரால்டின் சின் தெரிவித்தார்.
அத்துடன், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிக்கக் கைகொடுக்கும் விதமாக 2006ஆம் ஆண்டு முதல் தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் - எக்சான்மொபில் போக்குவரத்து உதவிநிதி வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறை ஆயிரம் மாணவர்களுக்கு $150 வரையிலான மின்பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. அதில் எக்சான்மொபில் நிறுவனத்தின் பங்களிப்பு $60,000 எனத் தெரிவிக்கப்பட்டது.

