அத்தியாவசிய காரணங்களுக்காக பாத்தாமுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிங்கப்பூரர்களை வரவேற்க ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.அத்தியாவசிய வர்த்தகம் மற்றும் அதிகாரபூர்வ விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பயணம் மேற்கொள்ளலாம் என்று இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்திருந்தன. இம்மாதம் 12ஆம் தேதியன்று இது குறித்து இரு நாடுகளும் கூட்டறிக்கை விடுத்தன.
இதையடுத்து கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான பரிசோதனைகளை நடத்த ‘பாத்தாம் சென்டர்’ படகு முனையத்தில் அதற்கான சாதனங்களைப் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த குறிப்பிட்ட படகு முனையம், கடல் பயணத்திற்குரிய ஒரே வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விமானப் பயணிகளுக்கு ஜகார்த்தாவிலுள்ள ‘சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
பயணங்களுக்கான விண்ணப்பங்களை வரும் 26ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். பின், பயணங்கள் கூடிய விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தோனீசியர்கள் அல்லது சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மட்டுமே இந்த பயணத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா செல்வோர், அங்குள்ள அரசாங்க அல்லது வர்த்தக நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இணையம் வழி விசாவுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.அதேபோல் இந்தோனீசியாவிலிருந்து இங்கு வருவோருக்கு சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பு அல்லது நிறுவனம் ஒன்றின் ஆதரவு இருக்க வேண்டும்.
இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரக் கழகங்களின் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளும் கட்டாயம்.இந்தப் பரிசோதனைகள் நாட்டை விட்டு கிளம்பும் முன்னரும் நாட்டைச் சென்றடைந்த பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
“வருகையாளர்களுக்கான செயல்முறைகள் தொடர்பில் நாங்கள் பாவனைப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளோம். கப்பலிலிருந்து இறங்குவது, பரிசோதனையைச் செய்வது, அவரவர் ஹோட்டல்கள்களுக்கு அழைத்துச் செல்வது ஆகியவை இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளன,” என்றார் தற்காலிக பாத்தாம் மேயர் சியம்சுல் பஹ்ரம்.
அடுத்த திங்கட்கிழமைக்கு முன்னர் இந்த செயல்முறைகளைச் சோதித்திட ஜகார்த்தாவின் சுகாதார அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் பாத்தாம் தீவுக்குச் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது இடங்கள், மக்களுக்கான வசதிகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய உத்தரவு இட்டதுடன் சில இடங்களுக்கு மீண்டும் சாயம் பூசப்பட்டன. பயணிகளுக்கு உதவ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தெளிவான அறிவிப்புகளை ஆங்காங்கே வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.