சிங்கப்பூரின் பொதுவான மின்னணுவியல் துறை, குறிப்பாக பகுதிமின்கடத்தி துறை, பொருளியலில் மற்ற துறைகளைவிட சிறப்பாகச் செய்துள்ளதால், அந்தத் துறையில் இன்னும் அதிகமான வேலைகள் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
பகுதிமின்கடத்தி துறை கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறிய அமைச்சர், வரும் ஆண்டுகளில் இத்துறை மேலும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது என்றும் விவரித்தார். இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சிங்கப்பூரின் மொத்த மின்னணுவியல் துறை $5.7 பில்லியனை நிரந்தர சொத்து கள் முதலீட்டில் பதிவு செய்ததுடன் மொத்த வர்த்தகத்துக்காக $376 மில்லியனையும் செலவிட்டது.
இந்த முதலீடுகள், இப்போது இத்துறை உருவாக்கிய வேலை வாய்ப்புகள் தவிர, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,100 வேலைகளை உருவாக்கும் என்றும் திரு சான் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த 1,300க்கு மேற்பட்ட நிறுவனங்கள் 2,800 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றில் 1,880 வேலை வாய்ப்புகள் என்றும் எஞ்சியவை வேலை இணைப்புகள் மற்றும் வேலைப் பயிற்சி வாய்ப்புகள் என்றும் இந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பாலானவை நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கு உரியவை என்றும் வர்த்தக தொழில் அமைச்சு விளக்கியது.
"பகுதிமின்கடத்தி துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணம், நமது முன்னைய தலைவர்கள் உருவாக்கிய அடித்தளம்தான் என்று நான் உறுதியாகக் கூறுவேன்.
"அவர்களின் முயற்சியில் உலகின் முன்னணி நிறுவனங்கள் இங்கு நல்ல முதலீடுகளைச் செய்தன. அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம்," என்றும் திரு சான் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதிமின்கடத்தி துறையின் பங்களிப்பு 1990ஆம் ஆண்டில் ஒரு விழுக்காடாக இருந்து 2019ஆம் ஆண்டில் 6.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில், ஒட்டுமொத்த பொருளியல் சரிவு கண்டதால், பகுதிமின்கடத்தி துறையின் வளர்ச்சி ஆண்டு அடிப்
படையில் 1.7% ஆக இருந்தது.
"இந்தத் தலைமுறை சந்தித்துள்ள மிக மோசமான பின்னடைவு இது. ஆனால், சிங்கப்பூர் இன்னும் கடுமையாகப் போராடி, வெவ்வேறு சந்தைகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்கினால் இந்தத் தலை
முறையின் மிக உயர்வான முன்னேற்றத்தை நாம் காண முடியும்," என்றும் அமைச்சர் சான்
வலியுறுத்தினார்.

