‘காட்டு நகர்’ என்று வர்ணிக்கப்படும் தெங்கா பேட்டையில் குடியேறவிருக்கும் ஏறக்குறைய 1,000 குடும்பங்கள், பொது குளிர்சாதன முறையில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு இருக்கின்றன.
அந்தப் புதிய குடியிருப்புப் பேட்டையில் சுமார் 8,000 பிடிஓ வீடுகள் இதுவரையில் விற்பனைக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியைப் பெற விரும்புவோருக்கு நடைமுறைச் செலவில் 30 விழுக்காடு வரை குறையும்.
தொடக்க செலவில் 15 முதல் 20 விழுக்காடு வரை மிச்சமாகும் என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.
தெங்காவில் இந்த நிறுவனமே பொது குளிர்சாதன முறையை நிர்வகித்து நடத்தும்.
தெங்கா நகரம் ‘அறிவார்ந்த எரிசக்தி நகர்’ என்று குறிப்பிடப்படுகிறது. அங்கு பல அறிவார்ந்த அதிநவீன அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அவற்றில் பொதுவான குளிர்சாதன வசதியும் ஒன்று.
குறிப்பிட்ட வீவக புளோக்குகளின் கூரைத் தளத்தில் தண்ணீரைக் குளிரூட்டக்கூடிய சாதனங்கள் அமைக்கப்படும்.
அந்தச் சாதனங்கள் சூரிய மின்சக்தியில் செயல்படும். அதிலிருந்து எல்லா வீடுகளுக்கும் குளிரூட்டப்பட்ட நீர் குழாய் வழியாக அனுப்பப்படும். இத்தகைய ஏற்பாடு மூலம் செலவு குறையும் என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள், தங்கள் வீடுகளில் கைபேசிச் செயலி ஒன்றைக் கொண்டே இந்தச் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம்.
‘மை தெங்கா’ என்ற அச்செயலி எஸ்பி குழுமத்துக்குச் சொந்தமானது. வாகன மின்னேற்றி நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை அந்தச் செயலி வழியாக குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான செய்கைகளைச் செய்து அதற்கான வெகுமதிகளையும் அந்தச் செயலி மூலம் மக்கள் பெறலாம்.
ஒவ்வொரு வீட்டு புளோக்கிலும் உள்ள மின்தூக்கிக் கூடத்தில் மின்னிலக்கப் பலகை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். அந்த மின்னிலக்க சாதனத்தைப் பார்த்து அந்தப் புளோக்கில் எவ்வளவு எரிசக்தி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் அதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் இப்போது ‘எனது தெங்கா அனுபவ நிலையம்’ என்ற பெயர் தாங்கிய ஒரு காட்சிக்கூடம் செயல்படுகிறது. அதில் பலவற்றையும் மக்கள் தெரிந்துகொள்ளலாம்.
வார நாட்களில் இந்தக் கூடம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். எல்லாரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் ஒரு நேரத்தில் 16 பேர் வரைதான் உள்ளே செல்ல முடியும் என்பதால் முன்பதிவு செய்துகொள்வது நல்லது.