புதிய பிடாடாரி குடியிருப்புப் பேட்டை வரும் 2027ஆம் ஆண்டிற்குள் ஒரு பலதுறை மருந்தகத்தைக் கொண்டிருக்கும். அப்பர் அல்ஜுனிட் சாலையில் அமையும் அந்த மருந்தகத்துடன் தாதிமை இல்லம் ஒன்றும் இணைந்திருக்கும்.
2030ஆம் ஆண்டிற்குள் மேலும் 12 பலதுறை மருந்தகங்களைக் கட்டி முடிக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. அதில் பிடாடாரி பலதுறை மருந்தகமும் ஒன்று. அந்த 12 பலதுறை மருந்தகங்களும் செயல்பாட்டிற்கு வந்தபின், சிங்கப்பூர் மொத்தம் 32 பலதுறை மருந்தகங்களைக் கொண்டிருக்கும்.
ஒரே இடத்தில் பலதுறை மருந்தகமும் தாதிமை இல்லமும் அமைவதற்கான காரணத்தை விளக்கிய சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, “பிடாடாரி பலதுறை மருந்தகத்திற்கு வரும் நோயாளிகளுக்கு அது முக்கியமானது. ஏனெனில், முதிர்ச்சியுற்ற பேட்டையான தோ பாயோவில் நாட்பட்ட நோய்களாலும் முதுமைக்கால நோய்களாலும் பாதிக்கப்படும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்றார்.
முதிர்ச்சியடைந்த நகர்ப்பகுதியான தோ பாயோவில், 93 ஹெக்டர் பரப்பளவிலான பிடாடாரி பேட்டை அமைந்துள்ளது. உட்லீ, பொத்தோங் பாசிர், பார்ட்லி ஆகிய மூன்று எம்ஆர்டி நிலையங்கள் அதையொட்டி அமைந்துள்ளன.
அல்காஃப் லேக்வியூ வீடமைப்புக் கழகத் தொகுதிக்கு புதிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் அமைந்திருக்கிறது. அதற்கு அருகே, அதாவது 500 மீட்டர் தொலைவில் உட்லீ எம்ஆர்டி நிலையம் இருக்கிறது.
அங் மோ கியோ பலதுறை மருந்தகத்திற்கு நேற்று சென்று இருந்த டாக்டர் ஜனில், பிடாடாரி பலதுறை மருந்தகம் அப்பேட்டையில் உள்ள பல புதிய இளம் குடும்பங்களுக்குச் சேவையாற்றும் என்று கூறினார்.
கட்டுமானப் பணிகள் படிப்படியாக முடிவடைந்தபின், வரும் 2022ஆம் ஆண்டுவாக்கில் அந்த வட்டாரத்தில் ஏறத்தாழ 10,000 வீவக குடியிருப்புகள் இருக்கும்.
“இவ்வாண்டின் பிற்பகுதியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். வரும் 2027ஆம் ஆண்டுவாக்கில் பிடாடாரி பலதுறை மருந்தகம் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்புகிறோம்,” என்றார் டாக்டர் ஜனில்.
அல்காஃப் லேக்வியூ உட்பட பிடாடாரியில் அமையும் முதல் இரண்டு வீடமைப்புத் திட்டங்களில் அமைந்துள்ள வீடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிவிட்டது.